அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் கொல்கத்தா, சென்னை போன்ற மைதானங்களில் அணி நிர்வாகம் சொல்லும் ஆடுகளத்தை பராமரிப்பாளர்கள் தயாரிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோற்ற போது கூட அந்த அணியின் பயிற்சியாளர் பிளமிங் ஆடுகளம் மீது குறை கூறியிருந்தார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எந்த ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்தோம் என்று கில் உளறி இருப்பது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெய்ஷாவின் சொந்த ஊர் என்பதால் குஜராத் அணிக்கு மட்டும் ஸ்பெஷல் பவரா என்று ரசிகர்கள் சாடி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் அணி கேப்டன் கில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் களிமண்ணால் உருவாக்கப்பட்ட ஆடுகளத்தில் தான் விளையாட வேண்டும் என்று முன்பே முடிவு செய்து விட்டோம்.
ஏனென்றால் செம்மண் ஆடுகளத்தை விட களிமண் ஆடுகளம் தான் எங்களுடைய பேட்டிங்கிற்கும் பந்து வீச்சுக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது. மேலும் களிமண்ணில் விளையாடும் போது பவுண்டரி அடிப்பது கடினமாகி விடும். பந்து பழையதாக மாறினால் பேட்ஸ்மேன்கள் கடுமையாக தடுமாறுவார்கள். இதனால் தான் இந்த ஆடுகளத்தை நாங்கள் மும்பை அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்று முடிவு எடுத்தோம் என்று கில் கூறியுள்ளார்.
மேலும் ரசித் கானுக்கு வெறும் இரண்டு ஓவர் தான் வழங்கப்பட்டு இருந்தது. இது குறித்து விளக்கம் அளித்த கில், நான் ரஷித் கானை இன்னிங்ஸின் கடைசியில் தான் பயன்படுத்த திட்டமிட்டு இருந்தேன். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வந்தார்கள். இதனால் போட்டி எங்களுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதன் காரணமாக ரஷித் கான் பந்து வீசும் சூழல் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்து வீசிய பின் பாராட்டினார். பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டிகள் நல்ல சவாலை கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.