மும்பை: மும்பை இந்தியன்ஸ் வீரர் வில் ஜாக்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். அவரது பௌலிங் பற்றிப் பாராட்டிப் பேசிய முன்னாள் வீரர் முகமது கைஃப், "அஸ்வின் கூட இப்படி ஸ்பின் செய்ய மாட்டார்" எனப் பாராட்டியது ரசிகர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வில் ஜாக்ஸ், இதுவரை சர்வதேசப் போட்டிகளில் 17 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 12 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரது பௌலிங் சராசரி மற்றும் எக்கனாமி ஆகியவை சுமாராகவே உள்ளன. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று ஓவர்கள் பந்துவீசிய ஜாக்ஸ், அதில் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதும், மிகவும் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்ததும் அவர்தான். மேலும் பேட்டிங்கில் வில் ஜாக்ஸ் 26 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்திருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக ரன்கள் சேர்த்த வீரரும் அவர்தான். இதை அடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வில் ஜாக்ஸ் குறித்து முகமது கைஃப் பேசுகையில், "வில் ஜாக்ஸ் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பந்தை அதிகமாக சுழல வைத்தார். அஸ்வின் கூட இந்த அளவுக்கு ஸ்பின் பந்து வீசமாட்டார். இஷான் கிஷன் வில் ஜாக்ஸ் பந்தைச் சரியாக கணிக்க முடியாமல் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட்டும் ஜாக்ஸின் பந்துவீச்சால் ஏமாற்றமடைந்தார்."
"வில் ஜாக்ஸ் இனிவரும் போட்டிகளில் முக்கியப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கலாம். அவர் ரச்சின் ரவீந்திராவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயமாகக் கை கொடுப்பார். அனைத்து எதிரணிகளிலும் இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வில் ஜாக்ஸ் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவார்," என்றார் கைஃப்.