டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் சூப்பர் ஓவரில் முடிந்தது. இது ஐபிஎல் வரலாற்றில் நடைபெறும் 50 ஆவது சூப்பர் ஓவராகும் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசியில் 9 ரன்கள் தான் தேவைப்பட்ட நிலையில் டெல்லி அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மிச்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துகளை வீசி திணறடித்தார்.
இதன் மூலம் ராஜஸ்தான் அணி வெறும் எட்டு ரன்களை மட்டுமே கடைசி 6 பந்துகளில் எடுத்தது. இதன் மூலம் போட்டி சமனில் முடிவடைந்தது. இதை அடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. இதில் மீண்டும் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய டெல்லி அணி சார்பாக ஸ்டார்க் பந்து வீசினார். அப்போதுதான் மிகப்பெரிய ஒரு சர்ச்சை சம்பவம் வெடித்தது.

ஸ்டார்க் வீசிய நான்காவது பந்து நோபால் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்டார்க் முன் காலை சரியாக தான் வைத்திருந்தார். அதன் பிறகு தான் தெரிவிக்கப்பட்டது, இது பேக் புட் நோ பால் என்று.. அதாவது பின் காலை, சைடில் உள்ள பின் கோட்டிற்கு உள் சரியாக வைக்க வேண்டும். ஒருவேளை பின் கால், பின் கோட்டுக்கு வெளியே வைத்தால் அது நோபால் என்று அறிவிக்கப்படும்.
ஆனால் ஸ்டார்க் விதிகளுக்கு உட்பட்டு பின்னால் இருந்த கோட்டுக்கு உள்ளே தான் காலை வைத்தார். கொஞ்சம் கூட கால் வெளியே செல்லவில்லை. ஆனால் இது நோபால் என அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூஸிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சைமன் தூல், இது நோபல் கிடையாது.
அவர் காலை விதிகள் உட்பட்டு சரியாகத்தான் வைத்திருக்கிறார். இது மிகவும் தவறான முடிவு என்று கூறியிருந்தார்.எனினும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை அடுத்த இரண்டு பந்திலே இரண்டு ரன் அவுட் ஆனதால் ராஜஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.