டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான 32 வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசியில் ஒன்பது ரன்கள் தான் தேவை என்ற நிலை இருந்தபோது ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசி போட்டியை தலைக்கீழ் மாற்றினார்.
இதனால் ராஜஸ்தான் அணி எட்டு ரன்கள் மட்டுமே எடுக்க ஆட்டம் சூப்பர் ஓவரில் முடிந்தது. இதுபோன்று மீண்டும் சூப்பர் ஓவரில் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்டார்க் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இதனை எடுத்து வெறும் நான்கு பந்துகளில் இந்த இலக்கை எட்டி டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மிட்செல் ஸ்டார்க், நான் என்னுடைய திட்டங்களை சரியாக நம்பி அதனை களத்தில் வெளிப்படுத்தினேன்.
நான் பந்து வீச ஓடி வரும்போது, எந்த மாதிரி பந்தை வீச வேண்டும் என்ற திட்டத்தோடு தான் செயல்படுவேன். சில சமயம் அது கை கூடும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால் நாம் நினைத்த மாதிரி வரும். சில சமயம் அப்படி நடக்காது. ஆனால் இந்த ஆட்டம் மிகவும் பிரமாதமாக அமைந்தது.
எனினும் நாங்கள் வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இதுபோன்ற கட்டங்களில் எவ்வாறு பந்து வீசுவேன் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு நான் விளையாடி இருக்கின்றேன். சூப்பர் ஓவரின் போது ராஜஸ்தான் அணியில் இரண்டு இடது கை பேட்ஸ்மன்களும் களத்தில் வந்து நின்றதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏனென்றால் நான் பந்து வீசும் கோணம் இடது கை பேட்ஸ்மன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். நான் வீசியதில் ஒரு பந்து மட்டும் தவறாக சென்று விட்டது. ஆனால் மற்ற பந்துகள் அனைத்தும் திட்டத்தின் படி செயல் படுத்தினேன். நான் வீசிய அந்த ஓவரை 10 முறை மீண்டும் விளையாடினாலும், பத்து வித்தியாசமான முறையில் செயல்பட்டு, 10 வித்தியாசமான முடிவுகள் கிடைக்கும்.
எனவே நாங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில் இளமையும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அக்சர் பட்டேல் அணியை நன்றாக வழி நடத்துகின்றார். இதேபோன்று ராகுல், டுபிளசிஸ் போன்ற திறமை அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றார்கள். குல்தீப் நன்றாக பந்து வீசுகிறார். இந்த வெற்றி நிச்சயம் எங்களுக்கு புது உத்வேகத்தை கொடுக்கும் என்று ஸ்டார்க் கூறியுள்ளார்.