லக்னோ: 2025 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தது. ஆனால், தற்போது அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த அணியின் தோல்விகளுக்கு கேப்டன் ரிஷப் பண்ட் மட்டுமே காரணம் எனச் சொல்ல முடியாது. அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஆலோசகர் ஜாகீர் கான் இடையே விரிசல் இருப்பதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தற்போது 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. தனது கடைசி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், அதிக நெட் ரன் ரேட் இருந்தால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இருக்கிறது லக்னோ அணி.

அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மிக மோசமாகச் சொதப்பி வருகிறார். அவரது கேப்டன்சி குறித்தும் விமர்சனம் உள்ளது. ஆனால் இவை மட்டுமே அந்த அணியின் தோல்விகளுக்கு காரணம் அல்ல என்று முகமது கைஃப் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
போட்டிகளின் இடைவேளைகளில், இப்போது அந்த அணியின் ஆலோசகர் ஜாகீர் கான் மட்டுமே ஆடுகளத்திற்குச் சென்று வீரர்களுடன் பேசுகிறார். அப்போது பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அந்த இடத்தில் இருப்பதில்லை. மேலும் போட்டியின் இடையே அவர் வீரர்களைத் தட்டிக் கொடுக்கும் வேலையை மட்டுமே செய்கிறார். கேப்டன் மற்றும் ஆலோசகருடன் இணைந்து திட்டங்களைத் தீட்டுவதில்லை. அவர் அனைத்து விஷயங்களில் இருந்தும் விலகி இருப்பதைப்போலவே இருக்கிறது.
இது குறித்து முகமது கைஃப் பேசுகையில், "'ஜாகீர் கானும், ஜஸ்டின் லாங்கரும் எதுவும் பேசுவதில்லை. அவர்கள் வீரர்களிடம் வெவ்வேறு விதங்களில் பேசுகின்றனர். நீங்கள் ஒரு புதிய அணியாக இருந்தால், அனைவரும் ஒன்றாகச் சேருவதற்கு சிறிது காலம் ஆகலாம். ஆனால் அந்த அணியை வழிநடத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்களே விலகி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தத் தொடரின் இறுதி கட்டம் வந்துவிட்ட நிலையிலும் அவர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்யவில்லை. இனியாவது அவர்கள் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும்'" என்றார் முகமது கைஃப்.