மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் தோனியை விளையாட வைப்பதற்காக விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இது குறித்து யாரும் இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. முன்னாள் வீரர் முகமது கைஃப் தற்போது தோனிக்காக செய்யப்பட்ட விதி மாற்றம் குறித்து அதிரடியாக பேசி இருக்கிறார்.
தோனி விளையாட விரும்பும் வரை ஐபிஎல் விதிகளில் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும் என கைஃப் கூறி இருக்கிறார். 2025 ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அதற்கு முன்னதாக ஐபிஎல் விதிகளில் சில மாற்றங்களை அறிவித்து இருக்கிறது ஐபிஎல் நிர்வாகக் குழு. அதில் முக்கியமானது இந்திய அணிக்காக ஆடிய வீரர்களை, உள்ளூர் வீரர்கள் என அறிவிக்கும் விதிமுறை ஆகும்.

இந்திய அணிக்காக ஆடிய வீரர்கள் சர்வதேச வீரர்களாகவே கருதப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது அதில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அணியில் இடம் பெறாத வீரர்கள் உள்ளூர் வீரராக வகைப்படுத்தப்படுவார்கள். இந்த விதியால் 2019 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐந்து ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடாததால் உள்ளூர் வீரராக அறிவிக்கப்படுவார்.
அதன் மூலம் சிஎஸ்கே அணி அவரை வெறும் நான்கு கோடி ரூபாய்க்கு உள்ளூர் வீரராக தக்க வைக்கும். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு சுமார் 8 கோடி ரூபாய் மிச்சம் ஆகும். இது அந்த அணிக்கு ஏலத்தின் போது மற்ற வீரர்களை வாங்குவதற்கு உதவிகரமாக இருக்கும். அதற்காகவே இந்த விதி மாற்றப்பட்டு இருக்கிறது.
இது குறித்து முகமது கைஃப் பேசுகையில், "நாம் மீண்டும் தோனியை ஐபிஎல் தொடரில் பார்க்கப் போகிறோம். அவர் முழு உடற் தகுதியுடன் இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக இருக்கிறது. நன்றாக விக்கெட் கீப்பிங் செய்கிறார். அதனால் தான் அவர் எப்போது விளையாட வேண்டும் என நினைத்தாலும், அவருக்காக விதிகளில் மாற்றம் செய்யப்படும் என நான் நினைக்கிறேன்." என்றார்.
மேலும், "அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என நினைத்தால், விளையாடுவார். அவர் அத்தகைய ஆளுமை கொண்ட வீரர். பெரிய போட்டிகளை வெல்லக் கூடியவர். சிஎஸ்கே அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த விதி சரியாக மாற்றப்பட்டதாக நான் நினைக்கிறேன். அவர் முழு உடற் தகுதியுடன் இருக்கிறார்; நன்றாக விளையாடுகிறார். ஏன் அவருக்காக விதியை மாற்றி, அவரை விளையாட அனுமதிக்க கூடாது? இது சரியானதுதான். தோனிக்காக தான் இந்த விதி மாற்றப்பட்டு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தோனி போன்ற ஒரு வீரருக்காக விதியை மாற்றுவதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள்" என்று பேசி இருக்கிறார் முகமது கைஃப்.