பெங்களூர்: ஐபிஎல் 2025 சீசன் தொடரின் எஞ்சிய போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பெங்களூருவில் மோத உள்ளன. இந்த சீசனில் ஆர்சிபி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த முறை ஆர்சிபி கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் ஆர்சிபி மற்றும் இந்திய வீரர் முகமது கைஃப், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியை பாராட்டியுள்ளார். 44 வயதான முகமது கெயிப், ஆர்சிபி அணி கடந்த சில சீசன்களை விட இந்த முறை மிகவும் சரி சமமான பேலன்ஸ் உடைய அணியாக தோன்றுவதாக கூறினார். விராட் கோலியின் அற்புதமான ஆட்டம் மற்றும் ரஜத் பட்டிதாரின் தலைமைத்துவத்தை புகழ்ந்த அவர், பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு இந்த சீசனில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய கையிப், "ஆர்சிபி அணியைப் பற்றி பேசினால், அவர்கள் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். 'பேட்டிங் அணி' என்ற வார்த்தையை நான் வலியுறுத்துகிறேன். ஏனெனில் அவர்கள் எப்போதும் பேட்டிங்கில் பலமான அணியாக இருந்தனர். ஆனால் இந்த முறை ரஜத் பட்டிதார் தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தி, 170-180 ரன்களை பாதுகாக்கும் போது எதிரணிகளை கட்டுப்படுத்தியுள்ளார்.
கோலி தனது சிறந்த ஆட்டத்தை தொடர்கிறார். ஆனால் பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு வெற்றி நம்பிக்கையை அளித்துள்ளனர். சிறந்த ஆல்-ரவுண்ட் அணி பொதுவாக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது, எனவே இந்த ஆண்டு அவர்கள் கோப்பையை வெல்ல முடியும் என நம்புகிறேன்," என்று கைஃப் கூறினார்.
ஐபிஎல்-ல் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாக ஆர்சிபி உள்ளது. இந்த அணி எப்போதும் பெரிய நட்சத்திர வீரர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி, இதுவரை கோப்பையை வெல்லவில்லை. ஐபிஎல்-ல் மூன்றாவது அதிக முறை (9 முறை) பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக ஆர்சிபி உள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (12 முறை) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (10 முறை) மட்டுமே முன்னிலையில் உள்ளன, இவை தற்போது ஐபிஎல்-ல் மிகவும் வெற்றிகரமான அணிகளாக உள்ளன. இந்த சீசனில் ஆர்சிபி அணியின் சமநிலையான செயல்பாடு மற்றும் ரசிகர்களின் ஆதரவு, அவர்களை கோப்பை நோக்கி அழைத்துச் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.