மும்பை: இந்தியா கிரிக்கெட் ஜாம்பவான் ஆன தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவருக்கு 42 வயதாகும் நிலையில் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? அல்லது அதற்கு முன்பே ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.
அவர் முழு உடற் தகுதியுடன் இருந்தால் மட்டுமே 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தோனி எப்போது ஓய்வு பெறுவார் என ஒரு பேட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஊடகங்கள் மட்டுமே இந்த கேள்வியை பெரிதுபடுத்தி வருவதாகவும், தான் ஒரு முறை தோனியிடமே எப்போது ஒரு வீரர் ஓய்வு பெற வேண்டும் என கேட்டதாகவும், அதற்கு அவர் அளித்த பதில் என்ன என்பதையும் இந்த பேட்டியில் கூறினார்.

இது குறித்து முகமது ஷமி பேசியதாவது - "தோனியே தனது ஓய்வு குறித்து "மீண்டும் பார்ப்போம்" என பதிலளித்து இருக்கிறார். ஆனால், ஊடகத்தை சேர்ந்தவர்கள் தான் அவரது எதிர்காலம் குறித்து கேள்விக்குறியோடு பேசி வருகிறார்கள். நான் தோனியிடமே, "எப்போது ஒரு வீரர் ஓய்வு பெற வேண்டும்?" என கேட்டு இருக்கிறேன்."
"அதற்கு அவர் என்ன சொன்னார் என்றால், "முதலில், உனக்கு கிரிக்கெட் ஆடுவது சலிப்பை ஏற்படுத்தி விட்டால் ஓய்வு பெற வேண்டும். இரண்டாவது, உன்னை அணியை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள் என தெரிந்தால், அப்போது ஓய்வு பெற வேண்டும்" என்று சொன்னார்."
"முதன் முதலில் நமக்கு எப்போது இந்த விளையாட்டை அனுபவித்து ஆட முடியவில்லையோ, அப்போது நமது நேரம் முடிவுக்கு வந்து விட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது நாம் நமது சிறந்த தருணத்தை தேர்வு செய்து ஓய்வை அறிவிக்க வேண்டும். ஏனெனில், அப்போது நமது உடல் ஒரு குறிப்பிட்ட கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாது என்பதை நமக்கு உணர்த்தும். அப்போதுதான் ஒரு வீரர் ஓய்வு பெற வேண்டும்" என்று கூறினார் முகமது ஷமி.