மும்பை : ஐபிஎல் மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களிலும், எந்த அணி அதிக வீரர்களை பயன்படுத்தி இருக்கிறது என்பதை தற்போது பார்க்க இருக்கின்றோம். பொதுவாக வெற்றிகரமான அணி என்பது ஒரே விதமான வீரர்களை வைத்து விளையாடுவார்கள்.
அவர்கள் தேவையில்லாமல் பிளேயிங் லெவனை மாற்ற மாட்டார்கள். உதாரணத்திற்கு சிஎஸ்கேவை எடுத்துக் கொண்டால் தொடக்க வீரர் இவர் தான்! ஃபினிஷர் இவர்தான்! சுழற் பந்துவீச்சாளர் இவர்தான்! ஆல் ரவுண்டர் இவர்தான் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருக்கும்.

இதில் ஏதேனும் ஒரு வீரர் சொதப்பினால் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் தடுமாறும் வீரர் ஃபார்முக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. ஒரே மாதிரி வைத்திருக்கும் அணிகள் பல வெற்றியை பெற்றிருக்கிறது. சில அணிகள் தேவையில்லாமல் வீரர்களை அடிக்கடி மாற்றி தொந்தரவு செய்வார்கள்.
எந்த அணி அடிக்கடி வீரர்களை மாற்றுகிறார்களோ, அவர்கள் நிச்சயம் வெற்றிகரமான அணியாக இருக்க மாட்டார்கள். இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் எந்த அணி அதிக வீரர்களை பயன்படுத்தி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஆர்சிபி அணி இதுவரை 165 வீரர்களை பயன்படுத்தி இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது.
டெல்லி 159 வீரர்களை பயன்படுத்தி இருக்கிறது. மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணி இருக்கிறது. பஞ்சாப் 156 வீரர்களை பயன்படுத்தி இருக்கிறது. டாப் மூன்று இடத்தில் இருக்கும் இந்த மூன்று அணிகளுமே அதிக வீரர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் ஒரு முறை கூட இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதில்லை.
நான்காவது இடத்தில் ராஜஸ்தான் 153 வீரர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஐந்தாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 வீரர்களையும் கொல்கத்தா அணி 139 வீரர்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த பட்டியலில் 103 வீரர்களை பயன்படுத்தி ஏழாவது இடத்தில் இருக்கிறது.
இதேபோன்று சன்ரைசர்ஸ் அணியும் 103 வீரர்களை பயன்படுத்தி எட்டாவது இடத்தில் இருக்கிறார்கள். புதிய அணிகளாக களமிறங்கியுள்ள லக்னோ 36 வீரர்களை பயன்படுத்தி ஒன்பதாவது இடத்திலும், குஜராத் 32 வீரர்களை பயன்படுத்தி பத்தாவது இடத்திலும் உள்ளன.