சென்னை: 2025 ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. அதில், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். அவரும் தோனியும் இணைந்து பயிற்சி செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனி அவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.

மேலும், தோனி வலைப் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடையுடன் காட்சியளித்ததும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இதுவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பை வென்றுள்ளது. இந்த முறை முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் அணியில் இணைந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பதிரானா, சிவம் துபே என பல மூத்த வீரர்களும், இளம் வீரர்களும் இணைந்த அணியாக இது இருப்பதால், இந்த முறை ஆறாவது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும், தற்போது 43 வயதாகும் நிலையில், தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம். எனவே, அவரது கடைசி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கோப்பை வென்று அவரை வழியனுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
சமீபத்தில், தோனி சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்தபோது, விமான நிலையத்தில் அவரது உடையில் இருந்த மோர்ஸ் கோடு என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. ராணுவம் மற்றும் ரகசிய அரசு அமைப்புகள் இந்த மோர்ஸ் கோடு என்ற சங்கேத மொழியைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்வதுண்டு.
அதன்படி, தோனியின் உடையிலிருந்த மோர்ஸ் கோடை சில ரசிகர்கள் மொழிபெயர்த்துள்ளனர். அதன்படி, அவர் "ஒன் லாஸ்ட் டைம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, இதுவே தனது கடைசி ஐபிஎல் தொடர் என்பதை அவர் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். எனவே, இந்த முறை சிஎஸ்கே அணி கோப்பை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.