மும்பை: தனக்கு நான்கு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தபோது தோனி தனக்கு டெஸ்ட் அணியில் விளையாடுமாறு அழைப்பு விடுத்ததாகவும் அதை தான் ஏற்கவில்லை என்றும் ஆஷிஷ் நெஹ்ரா கூறி இருக்கிறார். தோனி அளித்த அந்த வாய்ப்பை தான் பயன்படுத்தி இருக்க வேண்டும் என இப்போது நினைத்து வருந்துவதாக அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
2003 உலகக் கோப்பையில் ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஜாஹிர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா இணைந்து இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்தனர். அதன்பின் ஃபார்ம் மற்றும் காயம் காரணமாக ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

2005 முதல் 2009 வரை அவர் உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். 2009இல் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய அணியில் அனைத்துமே மாறிஇருந்தது. இடையே சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே என பல கேப்டன்கள் வந்து, சென்று இருந்தனர்.
2009இல் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில் ஒருநாள் அணியில் ஆஷிஷ் நெஹ்ரா ஆடினார். அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுமாறு தோனி தன்னை அழைத்ததாகவும், ஆனால் தான் அந்த அழைப்பை மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு பேட்டியில் கூறி வருத்தப்பட்டு இருக்கிறார் ஆஷிஷ் நெஹ்ரா.
அதன் பின்னும் தோனி நெஹ்ராவுக்கு வாய்ப்பு அளித்தார். ஆனால், சிலர் இப்போதும் கூட சமூக வலைதளங்களில் நெஹ்ராவின் வாய்ப்பை தோனி பறித்து விட்டார் என்று கூறுவார்கள். 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையிலும் நெஹ்ரா இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார்.
2014 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆஷிஷ் நெஹ்ராவை வாங்கியது. அதில் சிறப்பாக ஆடியதால் அடுத்து 2016 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தது. அது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இவ்வாறு தோனி ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணியில் இடம் பெறக் காரணமாக இருந்து இருக்கிறார்.