சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தோனியை தக்க வைக்க முடியாத வகையில் ஐபிஎல் விதிகள் வெளியாக உள்ளது. அதனால், 2025 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக எத்தனை வீரர்களை ஒரு ஐபிஎல் அணி தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்த விதிகளை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ளது. பிசிசிஐ வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலின்படி ஒரு அணி நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என கூறப்படுகிறது.
மேலும், கூடுதலாக இரண்டு வீரர்களை "ரைட் டூ மேட்ச்" என்ற விதியை பயன்படுத்தி ஏலத்தில் மற்றொரு அணியால் வாங்கப்பட்ட பின் தங்கள் அணிக்கே கொண்டு வரலாம் எனவும் கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தோனியை தக்க வைக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரை ஏலத்தில் விடுவிப்பதிலும் சில பிரச்சனைகளை உள்ளன.

குறைந்தது ஐந்து வீரர்களை தக்க வைக்க அனுமதி கிடைத்தால் மட்டுமே தோனியை 2025 ஐபிஎல் தொடரில் தக்க வைக்கலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முன்பு திட்டமிட்டு இருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் மதிஷா பதிரானா ஆகிய நான்கு முக்கிய வீரர்களை நிச்சயமாக தக்க வைக்க வேண்டும் என்பதில் சிஎஸ்கே அணி உறுதியாக உள்ளது.
இந்த நான்கு வீரர்களை தக்க வைத்த பின் கூடுதலாக வீரர்களை தக்க வைக்க அனுமதி கிடைத்தால் மட்டுமே தன்னை தக்க வையுங்கள் என தோனியே சிஎஸ்கே நிர்வாகத்திற்கு ஆலோசனை அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. தோனி ஏலத்தில் பங்கேற்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்க வேண்டி நேரிடும். இல்லையெனில் வேறு அணி தோனியை வாங்கினால் "ரைட் டூ மேட்ச்" என்ற விதியை பயன்படுத்தி சிஎஸ்கே அணிக்கே மீண்டும் கொண்டு வரலாம்.
ஆனால், இது சிக்கலான ஒரு விஷயமாகவே இருக்கும். தோனியை தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவித்து விட்டு, பின்னர் ரைட் டூ மேட்ச் பயன்படுத்தி தங்கள் அணிக்கு கொண்டு வரலாம். ஆனால், ஏலத்தில் தங்களிடம் எவ்வளவு தொகை மீதம் இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே எந்த ஒரு அணியும் முடிவுகளை எடுக்க முடியும்.
முக்கியமான வீரர்களான சிவம் துபே, மதிஷா பதிரானா அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரை ஏலத்தில் விடுவித்து விட்டு பின்னர் அவர்களை வாங்க முயற்சிப்பதிலும் சிக்கல் ஏற்படலாம். அவர்களுக்கு அதிக தொகை ஏலத்தில் கேட்கப்பட்டால் அவர்களை ரைட் டூ மேட்ச் முறையில் வாங்க முடியாமலும் போகலாம். அதனால், இக்கட்டான நிலையில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். எனவே, 43 வயதாகும் தோனியை அந்த அணி விடுவிக்கவும் வாய்ப்பு உள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்றாலும் அவர் முழு நேரமாக விளையாட மாட்டார் எனவும், குறிப்பாக பேட்டிங்கின் போது சில ஓவர்கள் மட்டுமே களமிறங்குவார் என கூறப்படுகிறது. அவரால் இம்பாக்ட் வீரராக மட்டுமே அவர் செயல்பட முடியும்.