சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இரண்டு நாட்களாக பல்வேறு தகவல்களும் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட முதல் வீடியோவில் விரிவாக பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவில் அளித்த பேட்டியில், "நீங்கள் இப்போது ஓய்வு பெற போகிறீர்களா?" என்று கேள்வி தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, "இல்லை, இப்போது நான் ஓய்வு பெறப்போவதில்லை. நான் இப்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறேன். நான் இந்த விஷயத்தில் எளிதாக முடிவு எடுக்கிறேன். ஒரு வருடத்தை மட்டும் தான் நான் கணக்கில் எடுத்துக் கொள்கிறேன்."

"இப்போது எனக்கு 43 வயதாகிறது. 2025 ஐபிஎல் முடியும் போது எனக்கு 44 வயதாகி இருக்கும். அதன் பிறகு நான் விளையாட வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய என்னிடம் பத்து மாதங்கள் இருக்கும். எனவே அது என்னுடைய முடிவு அல்ல, எனது உடலின் முடிவு. ஒரு வருடத்திற்கு பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்" என்று கூறி இருக்கிறார்.
இந்த பேட்டியில் அவர் மேலும் சில விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார் தோனி. தான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடியது பற்றி பேசி இருக்கிறார். "நான் இந்திய நாட்டுக்காக விளையாடுவேன் என நினைத்துப் பார்க்கவே இல்லை. நான் அப்போது ராஞ்சியில் வசித்து வந்தேன். முன்பு அது பீகாராக இருந்தது, இப்போது அது ஜார்கண்டாக இருக்கிறது. எங்கள் பக்கத்தில் கிரிக்கெட் குறித்த வரலாறே இல்லை. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது இந்தியாவுக்காக விளையாடுவேன் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லை."
"நாங்கள் பள்ளியில் படித்தபோது டென்னிஸ் பந்தில் விளையாடுவோம். அப்போது நான் பவுலிங் செய்வேன். அப்போது நான் இளம் வயதில் மெலிந்து இருந்தேன். என்னை எப்போதும் விக்கெட் கீப்பிங் செய்யுமாறு சொல்வார்கள். நான் என்னை விட மூத்த வயது உடையவர்களுடன் தான் அதிகம் விளையாடினேன். எனது வயதில் விளையாடுபவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள்."
"எனவே எனக்கு மூத்த வீரர்களுடன் விளையாடுவது மிகவும் முக்கியமானதாக இருந்தது. அது எனக்கு உதவி செய்தது. அது மட்டும் இன்றி நான் எனது தந்தையை பார்த்து மிகவும் பயந்து இருப்பேன். அவர் மிகவும் நேரத்தை கடைபிடிப்பவர். நானும் எனது தந்தையை போலவே மாறினேன்" என்றார் தோனி.