மும்பை : ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதி நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பே எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்கிறோம் என்ற பட்டியலை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என பிசிசிஐ கெடு விதித்து இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அதிகபட்சமாக ஒவ்வொரு அணியும் ஆறு இந்திய வீரர்கள் அல்லது வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் வீரர்களை கருதி கொள்ளலாம் என்ற விதியையும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இதன் மூலம் சிஎஸ்கே அணியில் தோனி uncapped வீரராக விளையாடுவார் என்றும் அவருக்கு அதிகபட்ச சம்பளம் நான்கு கோடி ரூபாய் கொடுக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியானது. இந்த சூழலில் தோனிக்கு தற்போது வயதாகி விட்டதால், அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன், தோனி இதுவரை அடுத்த சீசனில் பங்கேற்கிறாரா இல்லையா என்பது குறித்து எங்களிடம் எந்த கருத்தையும் சொல்லவில்லை. தோனி அடுத்த ஆண்டும் எங்கள் அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசையாக இருக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பு சிஎஸ்கேவுக்காக விளையாடுவது குறித்து தோனி தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
இன்னும் ஒன்பது நாட்களே பிசிசிஐ கொடுத்த கெடு உள்ள நிலையில் தோனி இன்னும் அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை என சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியிருப்பது ரசிகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது. தோனி அடுத்த ஆண்டு வருகிறேன் என்று சொன்னால் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பிளான் ஏ யும், தோனி இல்லை என்றால் எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற பிளான் பி ஐயும் சிஎஸ்கே அணி தற்போது தயாரித்திருக்கிறது.
ஒரு வேளை தோனி வரவில்லை என்று கூறிவிட்டால் அவருக்கு பதில் சமீர் ரிஸ்வி நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொள்ளப்படலாம் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரம் தோனி தொடர்பான முடிவை எதிர்நோக்கி இருக்கும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு தூக்கமே இருக்காது என்பது உறுதி. ரசிகர்கள் சிஎஸ்கே அணி ருதுராஜ், ஜடேஜா, பதிராணா,தோனி ஆகியோரை தக்க வைத்துக் கொண்டு ஆர் டி எம் கார்டு மூலம் சிவம் துபே மற்றும் கான்வேவை தேர்வு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.