லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளை தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் கடினமாக இருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது தோனி புதிய கேப்டனாக பதவி வகிக்கிறார். எனினும் தோனி கேப்டனான பிறகும் சிஎஸ்கே அணி தோல்வியை தான் தழுவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமமிங், தோனியிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், தோனி கேப்டனாக இருப்பது நிச்சயம் எங்களுக்கு சாதகமான விஷயம் தான். ஆனால் அவரிடம் மந்திர கோல் எதுவும் இல்லை. அவர் ஏதோ கையை வைத்தவுடன் அணி அப்படியே மாறிவிடும் என்று நினைக்கக் கூடாது.
அப்படி இருந்திருந்தால் அவர் அதை முன்பே செய்திருப்பார். நாங்கள் தற்போது தோனியுடன் இணைந்து கடின பயிற்சியை செய்து வருகிறோம். சரியான திசையில் செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். தற்போது நாங்கள் சின்ன சின்ன நடவடிக்கைகளை எடுக்க கவனம் செலுத்த உள்ளோம். இதன் மூலம் அணியின் செயல்பாட்டை முன்னேற்ற முயற்சி செய்வோம்.
கடந்த போட்டியில் எங்களுடைய செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. கொஞ்சம் கூட எதிரணிக்கு சவால் அளிக்காமல் நாங்கள் தோற்ற விதம் எனக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே எங்களுக்குள்ளேயே நாங்கள் சுயபரிசோதனை செய்து எப்படி முன்னேறலாம் என்பது குறித்து கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.
எங்கள் அணி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு செயல்பாட்டை களத்தில் நாங்கள் வெளிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். எங்கள் அணியில் தோல்வியின் மூலம் பல காயங்களை ஏற்படுத்தி விட்டது. அந்தக் காயத்தை எல்லாம் நாங்கள் உத்வேகமாக மாற்றி வெற்றியை நோக்கி செல்ல முயற்சி செய்வோம். வீரர்கள் தங்களது பார்மை கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். நம் அனைவரும் சிக்ஸர்களைப் பற்றியே பேசிக் கொள்கிறோம்.
ஆனால் அதுவே அனைத்தும் கிடையாது. சிக்ஸர் அடிப்பதற்கும் பெரிய ஷாட் ஆடி ரன்களை சேர்ப்பதற்கும் ரசிகர்கள் இடையே நிறைய ஆர்வம் இருப்பது எனக்கு தெரியும். இதை சில அணிகள் சிறப்பாக செய்கின்றது. எனினும் நாம் ஒன்றும் பேஸ் பால் போட்டியில் இல்லை சிக்ஸர் பவுண்டரி பற்றி பேச. பந்திருக்கும் பேட்டிற்கும் இடையே ஒரு நல்ல பேலன்ஸ் இருப்பது தான் கிரிக்கெட்டின் அழகே. லக்னோ அணியில் நிக்கோஸ் பூரான் நிச்சயம் எங்களுக்கு அபாயத்தை கொடுப்பார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கின்றார். அவரை விரைவில் ஆட்டம் இழக்க வைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று பிளமிங் கூறியுள்ளார்.