சென்னை: ஆஸ்திரேலிய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் ஐபிஎல் தொடரில் தோனிக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பார்த்து வியந்து போனதாகவும், தன் வாழ்நாளில் கேட்டதிலேயே அதுதான் அதிக சத்தமான ஒரு விஷயம் எனவும் சமீபத்தில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விவரித்து இருக்கிறார்.
ஜேக் ஃபிரேசர் 2024 ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆகி தனது முதல் ஐபிஎல் தொடரில் ஆடினார். அவர் ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக ஆடி, அதன் பின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றார். ஐபிஎல் தொடரில் அவர் அதிரடியாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது அவர் ஆஸ்திரேலியா அணியிலும் இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில், அவர் தனது முதல் ஐபிஎல் தொடரில் தோனியின் ரசிகர்கள் அவருக்காக கோஷம் எழுப்பியதை பற்றி வியந்து கூறி இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து இருந்தார். அப்போது தோனி களமிறங்கிய போதும், அவர் சிக்ஸ் அடித்த போதும் அவருக்காக எழுந்த கோஷம் விண்ணை முட்டியது. அது பற்றி ஜேக் ஃபிரேசர் பேசுகையில், "நான் பார்த்ததிலேயே சிறந்த விஷயம் சென்னை அணிக்கு எதிராக டெல்லி ஆடிய போட்டி தான். அது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அங்கு எங்கள் சொந்த மைதானத்தில் நாங்கள் ஆடினோம். நான் அந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் டெல்லி அணியின் நீல நிற உடையை அணிந்து, மைதானம் முழுவதும் நிறைந்து இருப்பார்கள் என்று நினைத்தேன்." என்றார்.
மேலும், "ஆனால், அங்கு இருந்த ரசிகர் கூட்டம் முழுவதும் (சிஎஸ்கே-வின்) மஞ்சள் நிற உடையை அணிந்து இருந்தது. எங்கு பார்த்தாலும் தோனியின் ஏழாம் எண் ஜெர்ஸி நிறைந்து இருந்தது. எந்த கொடியை பார்த்தாலும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. தோனி பேட்டிங் ஆட வந்தபோது மிகப்பெரிய கோஷம் எழுந்தது. அதுதான் நான் இதுவரை கேட்ட சத்தமான ஒரு விஷயம். நான் எனது காதுகளை பொத்திக் கொண்டேன். ஏனெனில், அது எனது தலையை பாதித்தது." என்றார் ஜேக் ஃபிரேசர்.
"அந்தப் போட்டியில் எனது ஆட்டத்திற்கு பின் அதுதான் மிக சிறந்த விஷயம் என்று நான் நினைத்தேன். அவர் சுமாராக 40 ரன்கள் எடுத்தார். அவர் களத்துக்கு வந்த பின் எங்கு பார்த்தாலும் சிக்ஸ் அடித்தார். அவர் அடித்த முதல் சிக்ஸ், அவர் களத்துக்கு வந்த போது இருந்த கோஷத்தை விட அதிக சத்தத்தை பெற்றது. அந்த 30 நிமிடமும் எங்கு பார்த்தாலும் அதிக சத்தம் இருந்தது. இது அனைத்தும் ஒட்டுமொத்த இந்தியாவில் ஒரே ஒரு நபருக்கு தான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதுதான் தோனி. அந்த ஒரு வீரருக்காக இவ்வளவு நடப்பதை பார்க்கும்போது நம்ப முடியாத விஷயமாக இருந்தது." என்றார் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்.