புதுச்சேரி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது படுமோசமாக விளையாடி வருகிறது.எட்டு போட்டிகளில் விளையாடிய 6 போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகளில் வெற்றியை தழுவி புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி பத்தாவது இடத்தில் இருக்கிறது.
இந்த சூழலில் எஞ்சி இருக்கும் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் சிஎஸ்கே இருக்கிறது. இந்த சூழலில் சிஎஸ்கே அணி இளம் வீரர்களை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு ஊரிலும் தங்களது பயிற்சி மையம் ஒன்றை திறந்து வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரியில் இன்று பயிற்சி மையம் ஒன்றை சிஎஸ்கே திறந்தது. இதில் சிஎஸ்கே அணியின் காயம் அடைந்த கேப்டன் ருதுராஜ் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டார். அப்போது ரிப்பன் வெட்டிய ருதுராஜ், இந்த அகாடமியை திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து அங்கு இருந்த இளம் விளையாட்டு வீரர்களும் பேசிய ருதுராஜ், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள்.
நான் சிறுவயதில் இருக்கும்போது இந்த மாதிரி கிரிக்கெட்டுக்கு பயிற்சி செய்ய எந்த ஒரு அகாடமியும் இல்லை.ஆனால் உங்களுக்கு அப்படியில்ல. நீங்கள் நன்றாக பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாருக்குத் தெரியும் நாளை இங்கிருந்து கூட ஒரு வீரர் சிஎஸ்கே அணிக்காக எதிர்காலத்தில் விளையாடலாம்.
சி எஸ் கே அணி நடத்தி வரும் பயிற்சி முகாமில் இருந்து எதிர்காலத்தில் சிஎஸ்கே கேப்டன் உருவாக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
தோனி எனக்கு ஒரு பெரிய அண்ணன் போன்றவர். அவருடன் செலவழிக்கும் நேரத்தை நான் மிகவும் நேசிக்கின்றேன். எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு உள்ளேயும் சரி, வெளியேவும் சரி. நிறைய விஷயங்களை அவர் சொல்லித் தருகிறார். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.
கிரிக்கெட்டில் உள்ள சின்ன சின்ன யுக்திகளை கூட அவர் நமக்கு சொல்லித் தருவார்.நம் அனைவருக்குமே சில கடினமான சூழல் வரும். அப்போது அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் உங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால் மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள். அதை செய்வதன் மூலம் உங்களுக்கு அமைதி கிடைக்கும் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்.