ராஞ்சி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனிக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் சட்ட சிக்கல் ஒன்று எழுந்துள்ளது, ஜார்கண்ட் மாநில அரசு சார்பாக அம்மாநில வீட்டு வசதி வாரியம் தோனிக்கு நிலம் ஒன்றை அளித்து இருந்தது. அந்த நிலத்தை தோனி சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தினாரா? என விசாரணை நடந்து வருகிறது.
அதில் தோனி தவறு செய்து இருந்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தோனி செய்த சாதனைகளை பாராட்டி ஜார்கண்ட் மாநில அரசு அவருக்கு ஹர்மூ சாலை என்ற பகுதியில் நிலம் ஒன்றை பரிசாக அளித்து இருந்தது.

அந்த நிலம் சுமாராக 10,000 சதுர அடி இருக்கும் என கூறப்படுகிறது. அரசால் வழங்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நிலத்தை வணிக ரீதியிலான எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. அந்த விதியை மீறி தோனிக்கு வழங்கப்பட்ட அந்த குறிப்பிட்ட இடத்தில் மருத்துவ ஆய்வு மையம் ஒன்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதிக அளவிலான மக்கள் வசித்து வரும் அந்த இடத்தில் இந்த ஆய்வு மையம் இருக்கிறது. இது பற்றி ஜார்கண்ட் மாநில வீட்டு வசதி வாரியத்துக்கு புகார்கள் சென்றுள்ளன. இது பற்றி பேசிய ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் சஞ்சய் லால் பஸ்வான், "மாநில வீட்டு வசதி வாரியத்தின் விதிப்படி குடியிருப்புக்காக வழங்கப்பட்ட இடத்தில் வணிக ரீதியிலான செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது." என்றார்.
"அது தொடர்பாக எங்களுக்கு சில புகார்கள் வந்துள்ளன. நான் அதிகாரிகளை இதுபற்றி விசாரிக்குமாறு கூறி இருக்கிறேன். இந்த புகார் உண்மை என்றால் தோனிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்." என கூறி இருக்கிறார். தோனி நேரடியாக இந்த விவகாரத்தில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்றாலும் அவரது பெயரில் தான் அந்த நிலம் இருக்கிறது. என்பதால் அவருக்குத்தான் நோட்டீஸ் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
43 வயது ஆகும் நிலையிலும் தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடிவு செய்து இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாட இருக்கிறார். அதற்கான பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தான் இந்த சட்ட சிக்கல் எழுந்து இருக்கிறது.