சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இருந்து தோனி குடும்பத்துடன் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். சென்னை ரசிகர்கள் காட்டிய அன்பின் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறாமல் தோனி தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடி வந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் தோனி இருந்தபோது சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை அடுத்து அடுத்த சீசன் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். அதன்பின் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராம் செயல்பட்டார்.
எனினும் அந்த சீசனில் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. இந்த நிலையில் தான் தோனிக்கு தற்போது 43 வயதாகிறது. மேலும் தன்னுடைய சம்பளத்தை நான்கு கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டிருக்கும் தோனி இந்த சீசனுடன் ஐபிஎல் போட்டிக்கு டாட்டா காண்பித்து விடுவார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையை அடுத்த நாவலூரில் சிஎஸ்கே அணி பயிற்சி மேற்கொண்டு வந்தது. இந்த தருணத்தில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் இருந்து தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். தோனி தனது குடும்பத்தினருடன் சென்னை விமான நிலையத்தில் சென்றதைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் சீசன் தொடங்க 10 நாட்களை உள்ள நிலையில், தோனி ஏன் சென்று விட்டார் என்று புலம்பி வந்தனர்.
ஒருவேளை தோனிக்கு காயம் ஏற்பட்டு விட்டதா இல்லை. தோனிக்கு வேறு ஏதேனும் பிரச்சினையா என்று பலரும் சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தான் ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. தோனியின் நெருங்கிய நண்பரான பண்டின் அக்காவிற்கு திருமணம் நடைபெற இருக்கிறது.இதற்காக டெஹ்ராடூன் சென்றுள்ள தோனி, அங்கு குடும்பத்தினருடன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றார். இதற்காகத்தான் தோனி சென்னையை விட்டு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.