மும்பை: சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தோனி பற்றி பேசிய ஒரு தகவல் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தோனியுடன் தான் தனிப்பட்ட முறையில் பேசி 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது என்றும், சிஎஸ்கே அணியில் விளையாடும் போது கூட மைதானத்தில் போட்டி பற்றி மட்டுமே பேசி இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
இதன் மூலம் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் இடையே மிகப் பெரிய விரிசல் இருக்கிறது என்பது போன்ற எண்ணம் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் ஒரு இரவு நேரக் கொண்டாட்டத்தில் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

தோனி, ஹர்பஜன் சிங்கை ஒரு நாற்காலியில் அமருமாறு கூறுகிறார். பின்னர் இருவரும் அமர்ந்து பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது தோனி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்த நிலையில் ஹர்பஜன் சிங் முன்பு கூறியது உண்மை இல்லையா அல்லது தற்போது தோனி மற்றும் ஹர்பஜன் சிங் சமரசம் ஆகி பேசத் தொடங்கி விட்டார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஹர்பஜன் சிங் தோனியின் கேப்டன்சியில் 133 போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி கேப்டனாக இருந்தபோது ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை வென்ற அணிகளிலும் ஹர்பஜன் சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை இந்திய அணியில் தேர்வு செய்வதற்காக ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற ஒரு சர்ச்சை இன்று வரை நீடிக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீடியோவின் மூலம், தோனி மற்றும் ஹர்பஜன் சிங் இடையே சுமூக உறவு ஏற்பட்டுள்ளதா அல்லது அவர்களின் உறவில் ஏதேனும் விரிசல் உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.