சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு கடைசி தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் இந்த தொடருக்கு பங்கேற்பதற்கு முன் அவர் ஒரு டீசர்ட்டை அணிந்து கொண்டு வந்தார்.
அதில் ஒன் லாஸ்ட் டைம் என்று மறைமுகமாக மோர்ஸ் கோட் மூலம் எழுதப்பட்டிருந்தது. ஆனால் இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு எதிர்பார்த்த மாதிரி சிறப்பாக இல்லை. சிஎஸ்கே அணியில் புதிதாக வந்த வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை.

இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி இளம் வீரர்களைக் கொண்டு களமிறங்கியது. அவர்கள் ஒரு அளவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சிஎஸ்கே அணி விளையாடிய 12 போட்டிகளில் 9 போட்டிகளில் தோல்வியை தழுவி வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த தருணத்தில் தோனிக்கு 43 வயது ஆகிறது. கடைசி இரண்டு போட்டிகள் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது. இத்துடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது இது தொடர்பாக ஒரு அப்டேட் கிடைத்திருக்கிறது. சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தோனி ஓய்வு குறித்து எந்த ஒரு முடிவையும் அறிவிக்க வில்லையாம்.
மேலும் சிஎஸ்கே அணி தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், அணியை கட்டமைத்துவிட்டு நல்ல நிலையில் இருக்கும்போது தான் தோனி ஓய்வு முடிவை அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் என்பது உறுதியாகி இருக்கிறது.
ஆனால் ருதுராஜ் கேப்டனாக தொடர்வார் என்று தெரிகிறது. தோனி வழக்கம் போல் விக்கெட் கீப்பர் ஆகவும் பேட்ஸ்மேன் ஆகும் மட்டும்தான் களமிறங்குவார் என தெரிகிறது. கடைசி இரண்டு ஓவர் மட்டும் பேட்டிங் செய்யும் அளவுக்கு தோனி தனது உடல் தகுதியை பாதுகாப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்த சீசனுக்கு ஏற்கனவே பலமான அணி கட்டமைக்கப்பட்டிருப்பதால் தோனியின் பேட்டிங் பெருமளவு தேவைப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் தோனி தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.