சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைப்பது என்ற முடிவை எடுத்து வருகின்றன. அக்டோபர் 31ம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐக்கு அளிக்க வேண்டிய கடைசி நாள் ஆகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்க வைக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், அது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்க முடியாமல் அந்த அணியின் அதிகாரிகள் திணறி வருகின்றனர் என்ற தகவல் தற்போது கிடைத்து இருக்கிறது.

2024 ஐபிஎல் தொடருக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் தோனியை ஒருமுறை மட்டுமே நேரில் சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது. 2025 ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பான புதிய விதிகளை பிசிசிஐ அறிவித்த பின் தோனியை சிஎஸ்கே நிர்வாகிகள் சந்திக்கவில்லை.
இந்த நிலையில், தோனியை தக்க வைத்தால் எவ்வளவு சம்பளம் அளிக்க வேண்டும்? அவர் இம்பாக்ட் வீரராக மட்டும் ஆடுவாரா? என்பது போன்ற விஷயங்கள் இன்னும் தெளிவாகவில்லை. அது குறித்து சிஎஸ்கே நிர்வாகிகள் தோனியிடம் பேச வேண்டும் என நேரம் கேட்டு உள்ளனர். அக்டோபர் 28 அன்று நேரில் சந்திக்க வேண்டும் என அவரிடம் நேரம் கேட்டு இருந்தனர்.
ஆனால், அந்த நாளில் வேறு வேலைகள் இருப்பதாக தோனி மறுத்து விட்டதாகவும், அக்டோபர் 29 அல்லது 30 அன்றுதான் சிஎஸ்கே நிர்வாகிகளை தோனி சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் 31 அன்றுதான் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வழங்க கடைசி தேதி எனும் நிலையில் கடைசி நேரத்தில் தான் தோனி சிஎஸ்கே நிர்வாகிகளை சந்திக்க இருக்கிறார்.
இது சிஎஸ்கே வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி தற்போது கேப்டன் இல்லை என்றாலும் சிஎஸ்கே அணியில் எந்தெந்த வீரர்களை தக்க வைப்பது என்ற ஆலோசனையை அவர் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் போட்டிகளில் எந்த அளவுக்கு பங்களிப்பை அளிக்க முடியும் என்பது குறித்த முடிவும் எடுக்கப்படும் என தெரிகிறது.