ராஞ்சி : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் அடுத்த ஆண்டு தொடங்க உள்ள நிலையில் இதற்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கின்றது. 42 வயதான தோனி இந்த தொடரில் களமிறங்குவாரா இல்லை ஓய்வு முடிவை அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வரும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் விதி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தன்னுடைய முழு உடல் தகுதியை பெற தோனி தீவிரமாக உழைத்து வருகிறார். கடந்த சீசனில் தோனி பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை.

வெறும் விக்கெட் கீப்பிங் பணியை மட்டுமே தோனி செய்து வந்தார். 2024 ஆம் ஆண்டு 14 போட்டியில் விளையாடிய தோனி மொத்தமாகவே 161 ரன்கள் தான் எடுத்தார். இதைப் போன்று 2023 ஆம் ஆண்டு தோனி 16 போட்டியில் விளையாடி 104 ரன்கள் தான் எடுத்தார். தோனி ஐபிஎல் தொடரில் 400 ரன்கள் குவித்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.
கடந்த தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் போனதற்கு தோனியின் பேட்டிங் சரிவு தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடைசி ஒரு முறை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்கி சாம்பியன் பட்டத்துடன் செல்ல வேண்டும் என தோனி முடிவு எடுத்திருக்கிறார்.
இதற்காக தன்னுடைய உடல் தகுதியை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். தோனிக்கு மூட்டு வலி தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனை சரி செய்வதற்காக ஏற்கனவே அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி தற்போது கால் மற்றும் உடல் நன்றாக பலமாக வேண்டும் என்பதற்காக பேட்மிண்டன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பேட்மிண்டன் விளையாடுவதன் மூலம் காலுக்கு நல்ல பலம் கிடைக்கும். மேலும் உடல் வலுவும் அதிகரிக்கும் சாதாரணமாக உடல் தகுதியை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் பேட்மிண்டன் தான் விளையாடுவார்கள். அந்த வகையில் தோனி தற்போது தீவிர பேட்மிண்டன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. வரும் ஐபிஎல் தொடரில் முழுமையாக பேட்டிங் செய்து ஆர்சிபி அணிக்கு கொடுக்க வேண்டிய கணக்கை திருப்பி தர தான் தோனி தீவிரமாக உழைத்து வருகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.