மும்பை: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்த பின், தோனி எதிரணி வீரர்களுடன் கைகுலுக்காமல் ஓய்வறை திரும்பினார். அப்போது பேக் ஸ்க்ரீன் மீது கடுமையாக கைகளால் குத்தி கோபத்தை வெளிப்படுத்தியதை நேரில் பார்த்ததாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரின் ஆர்சிபி அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் சிஎஸ்கே அணி இழந்தது. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே தோனி அபார சிக்ஸ் அடித்தாலும், அடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தோனியின் விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. சிஎஸ்கே அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்சிபி அணி வீரர்கள் மைதானத்தில் கூடுதலாகவே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில நிமிடங்கள் காத்திருந்த தோனி, ஆர்சிபி அணி வீரர்களுடன் கைகளை குலுக்காமலேயே சிஎஸ்கே அணியின் ஓய்வறைக்கு திரும்பினார்.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசுகையில், அன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்ற பின், அந்த அணி வீரர்கள் வேற லெவலில் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த ஆட்டத்தைல் மைதானத்தில் இருந்து நேரில் பார்த்து கொண்டிருந்தேன். ஆர்சிபி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, சிஎஸ்கே அணி வீரர்கள் கைகளை குலுக்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் ஆர்சிபி அணி கொண்டாட்டத்தை முடித்திருந்த போது தோனி ஓய்வறைக்கு திரும்பிவிட்டார். ஓய்வறைக்கு திரும்பிய போது, கதவுகளுக்கு வெளியில் இருந்த ஒரு ஸ்க்ரீனில் கைகளால் குத்தி கோபத்தை வெளிப்படுத்தினார். இதனை மேலே இருந்து கவனித்து கொண்டே இருந்தேன். தோனி செய்ததில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு எமோஷன் இருக்கும்.
அன்றைய தோல்விக்கு பின் தோனி அமைதியாக இல்லை. வெற்றிக் கோப்பையுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற தோனியின் கனவு அவர் கண் முன்னால் கலைந்தது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். ஒருவேளை ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றிருந்தால், தோனி ஓய்வை அறிவித்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது.
அதேபோல் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரை ஓய்வு பெற வேண்டும் என்று யாரும் சொல்லக் கூடாது. அவர் முழுமையான ஃபிட்னஸ் உடன் இருந்தால், இன்னும் 10 சீசன்கள் கூட விளையாடலாம். அதுகுறித்து கருத்து சொல்ல நாம் யாருக்கும் தகுதியில்லை என்று தெரிவித்துள்ளார்.