சென்னை: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில், சிஎஸ்கே அணியில் இம்முறை அன்கேப்டு வீரராக தோனி களமிறங்கி உள்ளார். 43 வயதான தோனிக்கு இது தான் கடைசி போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், JioHotstar-ல் "The MSD Experience" நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி, தனது ஐபிஎல் பயணம் குறித்து பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார். அதனை பற்றி தற்போது பார்க்கலாம். "நான் எப்போதும் சொல்வது இதை தான். இது ரசிகர்களின் அன்புக்கு நன்றி சொல்லும் விதமாக தான், நான் இதைக் பார்க்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன், இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது, ஆனால் அவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் வியக்கத்தக்கது. ஒரு விளையாட்டு வீரராக, நீங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான். நான் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விளையாடவில்லை, எனவே IPL தான் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு.
உங்கள் பெயரை ரசிகர்கள் அழைக்கிறார்கள், உற்சாகமாக காத்திருக்கிறார்கள், நீங்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் அவர்களின் விருப்பமான அணிக்கு எதிராக விளையாடினாலும் கூட! எனக்கு ஆதரவு தருகிறார்கள். இந்த அனுபவம் தான் மிகப்பெரிய மகிழ்ச்சி."
"நான் களமிறங்கும்போது, ஸ்கோர்போர்டை கவனிக்கிறேன்-அணி என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்துகொள்கிறேன். சில பந்துகளே மீதமாக இருந்தால், பெரிய ஷாட் ஆடி விளையாடுவது மட்டுமே என் குறிக்கோளாக இருக்கும். ஒரு பவுண்டரிக்குப் பதிலாக ஒரு சிக்ஸ் அடித்தால் அந்த இரண்டு ரன்கள் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
அதேபோல, பவுலர்களிடமும் நான் எப்போதும் கூறுவது: 'நீங்கள் 4 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், 6வது பந்து "டாட்" ஆக இருந்தால், அது நமக்கு வெற்றி தரும்.' அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது, பவுலர்களால் முடியும் என்று நம்ப வேண்டும் என்று தோனி கூறினார்.