சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெறப்போவது உறுதியாகி இருக்கிறது. அதே சமயம் அவரை உள்ளூர் வீரராக தக்க வைக்க சிஎஸ்கே திட்டமிட்டு இருப்பதால் அவரது சம்பளம் வெகுவாக குறைந்து இருக்கிறது. தோனி ஆடினால் நேரலையில் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பல கோடிகளை எட்டி வரும் நிலையில் அவருக்கான சம்பளம் என்பது கேலிக் கூத்தான விஷயமாக மாறி உள்ளது.
சமீபத்தில் ஐபிஎல் நிர்வாக குழு ஐபிஎல் விதிகளை வெளியிட்டு இருந்தது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் ஒரு அணியில் எத்தனை வீரர்கள் வரை தக்க வைக்கலாம் என்ற முக்கிய விதியும் வெளியானது. அதன்படி ஒரு அணி ஆறு வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம். எனவும் அதில் அதிகபட்சம் இரண்டு உள்ளூர் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்தியாவை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் கடைசி ஐந்து ஆண்டுகளில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலோ, பிசிசிஐ ஒப்பந்தம் இல்லாமல் இருந்தாலோ அந்த வீரர் உள்ளூர் வீரராகவே கருதப்படுவார் என்ற விதியும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குறிப்பிட்ட விதியால் தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.
அவர் 2019 முதல் ஐந்து ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதனால், இனி அவர் உள்ளூர் வீரராக கருதப்படுவார். உள்ளூர் வீரருக்கு அதிகபட்சமாக நான்கு கோடி மட்டுமே சம்பளம் அளித்தால் போதுமானது என்பதால், தோனிக்கு 2025 ஐபிஎல் தொடரில் 4 கோடி மட்டுமே சம்பளமாக அளிக்கப்படும்.
இதற்கு முன் அவர் 12 கோடி என்ற அளவில் சம்பளம் பெற்று வந்தார். ஆனால், அவருக்கான சம்பளத்தை குறைப்பதன் மூலம் மற்ற வீரர்களுக்கு அதிக தொகையை ஏலத்தில் செலவிட முடியும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கருதுகிறது. தோனியும் அதே முடிவில் இருக்கிறார். அதனாலேயே, தோனியை உள்ளூர் வீரராக மாற்றி அறிவிக்குமாறு பிசிசிஐ-யிடம் சிஎஸ்கே அணி கோரிக்கை வைத்திருந்தது.
சிஎஸ்கேவின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டு இருப்பதோடு இந்த ஆண்டிலேயே அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம் தோனி விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. அதே சமயம், அவரது சம்பளமும் வெகுவாக குறையப் போகிறது.