சென்னை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 20 வயது வீரரான ஷேக் ரஷீத்தை தோனி கடுமையாக சாடினார். ஷேக் ரஷீத் ஒரு தவறை செய்தபோது, தோனி 'மூளையை பயன்படுத்துமாறு' சைகை செய்து கோபத்தை காட்டினார்.
பொதுவாக தோனி ஆடுகளத்தில் கோபப்பட மாட்டார். ஆனால் இந்த முறை சிஎஸ்கே அணி மோசமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஷேக் ரஷீத் தவறு செய்ததால் தோனி பொறுமை இழந்து இவ்வாறு நடந்து கொண்டார். முதலில் பேட்டிங் செய்த ஷேக் ரஷீத், தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஷேக் ரஷீத் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி, 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும், இந்த போட்டியில் 19.5 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேசிங் செய்து கொண்டிருந்தபோது, எட்டாவது ஓவரின் கடைசி பந்தில் இஷான் கிஷன் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். அப்போது அங்கு ஃபீல்டிங் நின்றிருந்த ஷேக் ரஷீத் பந்தை எடுத்து நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் வேகமாக வீசினார். ஆனால் அப்போது அங்கே பந்தை பிடிப்பதற்கு யாரும் இல்லை.
அதை பார்க்காத ஷேக் ரஷீத், ரன் அவுட் செய்யும் நோக்கத்தில் பந்தை வேகமாக எறிந்தார். பந்து ஸ்டம்பில் படவில்லை. பந்தை பிடிக்க ஆள் இல்லாததால் இஷான் கிஷன் மேலும் ஒரு ரன் ஓடினார். அதைப் பார்த்த தோனி கோபமடைந்தார். ஷேக் ரஷீத்தை பார்த்து 'மூளையை பயன்படுத்துமாறு' சைகை செய்து சொன்னார். அதன் பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட் இழந்த நிலையில் 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்த தோல்வியால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது. இனி மீதமுள்ள ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். அதை வைத்துக் கொண்டு பிளே ஆஃப் செல்வது கடினம்.