சென்னை: தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியிலிருந்து விரைவில் விலக உள்ளார் எனவும், முதற்கட்டமாக விக்கெட் கீப்பிங் பணியை சமீபத்தில் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட ஊர்வில் படேலிடம் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததோடு சில சவால்களைச் சந்தித்து வருகிறது. அந்த அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்தும் வெளியேறினார். அதேபோல, வேறு சில வீரர்களும் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டனர். மொத்தம் மூன்று வீரர்கள் காயம் காரணமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஆயுஷ் மத்ரே, டெவால்ட் பிரெவிஸ் மற்றும் ஊர்வில் படேல் ஆகிய மூன்று வீரர்கள் மாற்று வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஏற்கனவே ஆயுஷ் மத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணிக்காகப் போட்டிகளில் விளையாடுகின்றனர். அவர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக இதுவரை விளையாடி உள்ளனர். இந்த நிலையில், மூன்றாவதாகத் தேர்வு செய்யப்பட்ட ஊர்வில் படேல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார்.
தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், அடுத்த கட்ட அணியைத் தயார் செய்வதற்காகவே அவர் இதுபோல மாற்று வீரர்களைத் தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தோனியின் விக்கெட் கீப்பிங் பணியைச் செய்வதற்குச் சரியான மாற்று வீரர் சிஎஸ்கே அணியில் இல்லை என்ற சூழல் நிலவியது. இந்த நிலையில் தான், ஊர்வில் படேல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் சிஎஸ்கே அணி நடத்திய இரண்டு பயிற்சிப் போட்டிகளில் அதிரடியாக ரன் குவித்து இருக்கிறார். இதை அடுத்து, அவரை அடுத்து வரும் போட்டிகளில் விக்கெட் கீப்பராகப் பயன்படுத்த தோனி முடிவு செய்துள்ளதாக சிஎஸ்கே வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன் காரணமாகவே, அவசர அவசரமாக ஊர்வில் படேல் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்றும், இல்லையெனில் சிஎஸ்கே அணி மாற்று வீரரைத் தேர்வு செய்யாமலே கூட இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மற்ற இரண்டு மாற்று வீரர்களும் உடனடியாக அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு அடுத்து நடந்த போட்டிகளில் விளையாடினர். அதேபோலவே, ஊர்வில் படேல் நேற்று தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிஎஸ்கே அணி வியாழன் அன்று விளையாட உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் போட்டியில் தோனி ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் மட்டுமே செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.