மும்பை: பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் அணிகள் மெகா ஏலத்திற்கு முன்பாக 5 இந்திய வீரர்களை தக்க வைக்க ஒப்புதல் கொடுத்தால், அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக தோனி மீண்டும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி வீரராக தோனியை தக்க வைத்தால், சிஎஸ்கே நிர்வாகத்தின் பர்ஸ் தொகையும் அதிகமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்கவுள்ள ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் மும்பையில் நடக்கவுள்ளது. டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை தக்க வைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. இதில் கேகேஆர், மும்பை உள்ளிட்ட அணிகள் 5 முதல் 6 வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் லக்னோ, குஜராத், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட அணி நிர்வாகங்கள் பழைய முறையே ரீடென்ஷனில் பின்பற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர். 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என்ற அளவிலேயே தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஒரு ஆர்டிஎம் வாய்ப்பு கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்து வருகின்றனர்.
ஆனால் பிசிசிஐ நிர்வாகம் தரப்பில் 5 வீரர்கள் வரை தக்க வைக்க ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், 4 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது 3 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என்ற அளவில் அனுமதிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. ஒருவேளை 5 வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதிக்கும் பட்சத்தில் சிஎஸ்கே ஜாம்பவான் தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் தோனியை பொறுத்தவரை பேட்ஸ்மேனாக இன்றும் சிறப்பாக செயல்படக் கூடியவர். ஆனால் ருதுராஜ், ஜடேஜா, பதிரானா, தீபக் சஹர், சிவம் துபே ஆகியோர் தக்க வைக்க நிலை உள்ளது. அதேபோல் தோனியை ஏலத்தில் விட்டால், மீண்டும் வாங்குவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ரூ.20 கோடி வரை செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும்.
ஆனால் தோனி சிஎஸ்கே அணியின் பர்ஸை காலி செய்யக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார். கடந்த முறை மெகா ஏலத்தின் போது கூட ஜடேஜாவுக்கு ரூ.16 கோடி கொடுத்துவிட்டு, தோனி ரூ.12 கோடி ஒப்பந்தத்தை எடுத்து கொண்டார். இதனால் பிசிசிஐ நிர்வாகம் தரப்பில் 5 இந்திய வீரர்களை தக்க வைக்க அனுமதி கொடுத்தால், கடைசி வீரராக தன்னை தக்க வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தோனி கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிசிசிஐ முடிவை எதிர்நோக்கி சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.