சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த சீசனில் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்கள், இனி Uncapped வீரர்களாக விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. அடுத்த சீசனில் விளையாட தோனி ஆர்வமாக இருந்தாலும், பெரிய தொகைக்கு ரீடெய்ன் செய்யப்பட்டு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த தோனி விரும்பவில்லை. இதனால் குறைந்த தொகைக்கு ரீடெய்ன் செய்தால், விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

அதற்கேற்ப பிசிசிஐ தரப்பில் நடத்தப்பட்ட ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத், 5 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களை அன்-கேப்ட் வீரர்களாக விளையாடலாம் என்று விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது, இந்த விதி செயல்பட்டு வந்தது.
ஆனால் 2022ஆம் ஆண்டு மெகா ஏலம் வரை எந்த அணியும் இந்த விதியை பயன்படுத்தாததால், ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த விதிமுறையை ரத்து செய்தது. இதனிடையே சிஎஸ்கே அணி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஏனென்றால் தோனி போன்ற ஒருவர் அன்-கேப்ட் வீரராக ரீடெய்ன் செய்யப்படுவது சரியாக இருக்காது.
அவர்களின் அனுபவத்திற்கும், சாதனைகளுக்கும் உரிய மதிப்பளிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடத்தப்பட உள்ள நிலையில், ரீடென்ஷன் விதிமுறைகள் வெளியாகியுள்ளது. இதன் 7வது விதிமுறையாக, இந்திய அணிக்காக ஆடிய வீரர்கள் அன்-கேப்ட் வீரர்களாக மாற்றப்படலாம்.
அதற்கு அந்த அணி கடைசி 5 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்க கூடாது. அதேபோல் பிசிசிஐ ஒப்பந்தத்திலும் இருந்திருக்க கூடாது என்று விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விதிமுறைகள் இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியை சிஎஸ்கே அணியால் அன்-கேப்ட் வீரராக தக்க வைக்க முடியும்.
ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது. அதில் ஒரு அன்-கேப்ட் வீரரை கட்டாயம் தக்க வைக்க வேண்டும் என்ற விதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அந்த அன்-கேப்ட் வீரருக்கான இடத்தில் எளிதாக தோனியை தக்க வைத்து சிறிய தொகையை மட்டுமே ஊதியமாக கொடுக்க முடியும். இதனால் அடுத்த சீசனில் தோனி சிஎஸ்கே அணிக்காக களமிறங்கப் போவது உறுதி என்று பார்க்கப்படுகிறது.