சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 கோடியை தியாகம் செய்ய தயாராகி இருக்கிறார் தோனி. 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக தோனியை சர்வதேச போட்டிகளில் விளையாடாத உள்ளூர் வீரர் என்ற பிரிவின் கீழ் சிஎஸ்கே அணி தக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் காரணமாக அவர் தற்போது வாங்கி வரும் 12 கோடி சம்பளத்திலிருந்து 8 கோடியை இழக்க நேரிடும். நான்கு கோடியாக அவரது சம்பளம் குறையும்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் நான்கு அல்லது ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற விதி உள்ளது. அது குறித்து பிசிசிஐ விரைவில் முழு அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கே அணி ஒரு இக்கட்டான நிலையை சந்தித்து இருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் தோனியால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்ற சூழ்நிலை உள்ளது. அதே சமயம் அவரை ஆட வைத்தால் அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரும்.

தோனிக்கு தற்போது 12 கோடி சம்பளம் அளிக்கப்படுகிறது. அவரை மெகா ஏலத்துக்கு முன்னதாக தக்க வைத்தால் அதே 12 கோடி சம்பளம் அல்லது பிசிசிஐ அறிவிக்கும் கூடுதல் சம்பள விகிதத்தை அளிக்க வேண்டி வரும். அப்படி செய்தால் சிஎஸ்கே அணியின் கையிருப்பில் குறிப்பிட்ட அளவு தொகை தோனியின் சம்பளத்துக்கு சென்று விடும். அதனால் ஏலத்தில் புதிய வீரர்களை வாங்குவதில் சிரமம் ஏற்படலாம்.
இதை கருத்தில் கொண்ட தோனி, தன்னை உள்ளூர் வீரராக குறைந்த சம்பளத்துக்கு தக்க வைக்க முடிந்தால் மட்டுமே 2025 ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யுங்கள் என சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. தோனி விளையாடினால் அது ஐபிஎல் தொடருக்கு மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் என்பதால் பிசிசிஐ-யும் உள்ளூர் வீரர் விதியை மீண்டும் கொண்டு வர உள்ளது.
2021க்கு முன் வரை இருந்த அந்த விதியை தற்போது மீண்டும் கொண்டு வரவுள்ளது பிசிசிஐ. அதன்படி ஐந்து ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் உள்ளூர் வீரராக அறிவிக்கப்படுவார். ஐபிஎல் விதிப்படி உள்ளூர் வீரருக்கு அதிகபட்சமாக 4 கோடி வரை சம்பளம் கொடுத்தால் போதுமானது. அதன்படி பார்த்தால் தோனி தற்போது வாங்கி வரும் 12 கோடி சம்பளத்திலிருந்து 8 கோடியை இழக்க நேரிடும். சிஎஸ்கே அணிக்காக 8 கோடியை தியாகம் செய்ய அவர் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.