கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் ஒரு முறை தோனி சரியான ஃபீல்டிங் வியூகத்தை வகுத்து தனது விக்கெட்டை வீழ்த்தியதாகவும், அது குறித்து தான் அந்த போட்டியின் முடிவில் தோனியிடமே கேள்வி எழுப்பியதாகவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரரான வெங்கடேஷ் ஐயர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்துவிட்டது. வெங்கடேஷ் ஐயர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்வதற்காக களம் இறங்கினார்.

மூன்றாவது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். தீபக் சாஹர் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது ரவீந்திர ஜடேஜாவை டீப் ஸ்கொயர் லெக் திசையில் இருந்து ஷார்ட் தேர்ட் திசையில் ஃபீல்டிங் நிற்க வைத்தார் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி. சரியாக அதற்கு அடுத்த பந்தை வெங்கடேஷ் ஐயர், ஜடேஜாவிடம் அடித்தார். ஜடேஜா கேட்ச் பிடித்ததை அடுத்து வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார்.
"இது எப்படி நிகழ்ந்தது? எப்படி நான் அங்கே தான் அடிப்பேன் என தோனி சரியாக கணித்தார்?" என வெங்கடேஷ் ஐயர் குழப்பத்தில் ஆழ்ந்தார். இதை அடுத்து, அதை தோனியிடமே கேட்டு விடுவோம் என போட்டி முடிந்தவுடன் வெங்கடேஷ் ஐயர் தோனியிடம் சென்று கேட்டுள்ளார்.
அது பற்றி ஒரு பேட்டியில் தற்போது பேசியுள்ளார். அந்த விவரம் இங்கே: "தோனி அப்போது டீப் ஸ்கொயர் லெக் திசையில் இருந்து ஒரு ஃபீல்டரை ஷார்ட் தேர்ட் திசைக்கு மாற்றினார். ஆனால் ஷார்ட் தேர்ட் பொதுவாக எங்கே இருக்குமோ அதிலிருந்து சிறிய அளவு தூரத்தில் ஃபீல்டரை நிறுத்தினார். அதற்கு அடுத்த பந்தை நான் நேராக அந்த இடத்தில் நின்ற ஃபீல்டரின் கைகளுக்கு அடித்தேன்."
"அந்தப் போட்டி முடிந்தவுடன் தோனியிடம், "ஏன் அந்த இடத்தில் ஃபீல்டரை நிறுத்துனீர்கள்?" என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் விவரமான பதிலை கூறினார். அவர் எனது பேட்டில் இருந்து பந்து எந்த கோணத்தில் செல்கிறது என்பதை புரிந்து கொள்ள முயன்றதாக கூறினார்."
"அவர் கோணத்தை புரிந்து கொள்ளும் முறை இந்த உலகத்தை தாண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. நான் அந்த இடத்தில் தான் அடிப்பேன், பந்து அந்த திசையில் தான் செல்லும் என சரியாக கணித்து அந்த இடத்தில் ஃபீல்டரை நிறுத்தி இருக்கிறார். இதுதான் உண்மையான கேப்டன்சி. ஒரு பேட்ஸ்மேன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெளிவாக புரிந்து கொள்வது இதுதான்."
"இது தோனியின் தந்திரமான செயல். நான் அடுத்த இரண்டு பந்துகள் வரை காத்திருந்து ஆடி இருக்கலாம். ஆனால், நான் அதை செய்யவில்லை. அடுத்த பந்தையே நான் அடித்தேன். அது அப்படியே கேட்ச் ஆனது. கேமராவில் எப்படி ஃபீல்டிங் மாற்றப்பட்டது என்பது காண்பிக்கப்பட்டது. நான் அடுத்த பந்தை அதே இடத்தில் தான் அடித்து இருப்பேன். ஃபீல்டிங்கில் ஒரு விஷயம் ஏன் மாற்றப்படுகிறது? என்பதை பேட்ஸ்மேன் தான் புரிந்து கொள்ள வேண்டும்" என வெங்கடேஷ் ஐயர் விவரித்தார்.