மும்பை: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்தது என்றால் அதற்கு காரணம் பந்துவீச்சில், பும்ராவும், பவுல்ட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து பட்டையை கிளப்பியது தான். இந்த நிலையில், போர் பதற்றம் காரணம், டிரண்ட் பவுல்ட் அணியை விட்டுவிலகி நியூசிலாந்துக்கு சென்றார். இதனால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவாரா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், ட்ரென்ட் போல்ட், ஐபிஎல் 2025-ன் மீதமுள்ள போட்டிகளில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியின் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரரான போல்ட், தற்போது பர்பிள் கேப் பந்தயத்தில் நான்காவது இடத்தில் உள்ளார். ஐந்து முறை சாம்பியனான எம்ஐ அணி, மெகா ஏலத்தில் போல்ட்டை 12.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவர் 18 விக்கெட்டுகளை 8.49 என்ற எகானமி ரேட்டில் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம் காரணமாக ஐபிஎல் 18வது சீசன் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டது. மே 17 முதல் ஐபிஎல் மீண்டும் தொடங்க உள்ளது. மும்பையின் முதல் போட்டி பெங்களூரின் எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், எம்ஐ அணி தங்கள் முதன்மை வெளிநாட்டு வீரர்களான ரயான் ரிக்கெல்டன் மற்றும் கார்பின் போஷ் ஆகியோரின் வருகைக்காக காத்திருக்கிறது.
இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா, தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு மே 25 வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், மாத இறுதிக்குள் வீரர்கள் WTC இறுதிப்போட்டிக்கு தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மற்றொரு வீரரான ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸின் வருகை இன்னும் உறுதியாகவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மே 29 முதல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வீரர்கள் திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளது. இது ஐபிஎல் அட்டவணையுடன் மோதல் ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணியின் 2025 சீசன் பயணத்தைப் பொறுத்தவரை, வழக்கம்போல் மோசமான தொடக்கத்திற்கு பிறகு, ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அபாரமாக மீண்டு வந்தனர். ஐபிஎல் இடைநிறுத்தப்படும்போது, 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி, மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை உறுதி செய்ய முயலும்.