மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்திருந்தது.
இந்த நிலையில் லக்னோ அணி 161 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ஏழை குழந்தைகள் இலவசமாக போட்டியை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்த உத்வேகம் எங்களுக்கு சிறப்பானதாக அமைந்தது. இந்த உத்வேகத்தை தொடர்ந்து அடுத்த போட்டிகளிலும் நாங்கள் கொண்டு செல்வோம். எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தற்போது நன்றாக செயல்படுகிறார்கள்.
தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் இறுதி கட்டத்தில் சில விக்கெட்டுகளை இழந்தோம். எனினும் நமந்தீர் மற்றும் கார்பின் ஆகியோர் களத்திற்கு வந்து அதிரடியாக விளையாடி இருக்கிறார்கள்.
எங்களுக்கு போட்டியில் எப்போது அதிரடி காட்ட வேண்டும் என்று நன்றாக தெரியும். எங்கள் வீரர்கள் அனைவரும் சிறப்பானவர்கள். ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய பொறுப்பை சிறப்பாக செய்வதன் மூலம் நல்ல அணியை உருவாகும். நான் இன்றைய ஆட்டத்தில் ஒரு ஓவர்தான் வீசினேன். நான் பௌலிங் செய்வதற்கான சூழல் ஏற்படவில்லை.
அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன். கார்பின் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினார். அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு செய்தோம். ஐபிஎல் தொடர் தற்போது கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்த தொடர் சவால் ஆனதாக மாறிவிட்டது.
எனவே ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்படும். எனவே நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட முயற்சி செய்து வருகின்றோம். தற்போது அடுத்த போட்டியிலும் நன்றாக விளையாடும் உத்வேகத்துடன் இருக்கின்றோம் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.