லக்னோ : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, "நிச்சயம் இந்த தோல்வி ஏமாற்றத்தை அளிக்கிறது."

"நான் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பீல்டிங்கில் நாங்கள் 10, 12 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். தற்போது அந்த ரன்கள் தான் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான் எப்போதுமே என்னுடைய பந்துவீச்சை மகிழ்ச்சியாக மேற்கொள்வேன். எங்கள் அணியில் பல பந்துவீச்சாளர்கள் கிடையாது. எனினும் ஆடுகளத்தை நான் கணித்து வீரர்களை சிறப்பாக பயன்படுத்த முயற்சி செய்வேன்."
"நான் எப்போதுமே விக்கெட்டுகளை தேடி பந்து வீசுவது கிடையாது. ஆனால் பேட்டர்சை தவறு செய்ய தூண்டுவேன். இந்த போட்டியிலும் அதேபோல்தான் எனக்கு நிகழ்ந்தது. எங்கள் அணியின் பேட்டிங் இன்று கொஞ்சம் தடுமாறியது. வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கின்றோம். நாங்கள் ஒரே அணியாக இணைந்து தான் வெற்றி பெறுவோம். ஒரே அணியாக இணைந்து தான் தோல்வியை தழுவி இந்த தோல்விக்கு நான் என்னுடைய முழு பொறுப்பை எடுத்துக் கொள்கின்றேன்."
"களத்தில் இருக்கும் பேட்டர்ஸ், பெரிய ஷார்ட் ஆட வேண்டும். ஆனால் திலக் வர்மா பெரிய ஷாட்டை அடிக்க முடியவில்லை. இதனால்தான் அவர் ரிட்டயர்டு அவுட் ஆனார். கிரிக்கெட்டில் சில சமயம் நாம் முயற்சி செய்வது நடக்கும். சில சமயம் நடக்காது. ஆனால் நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதை கைவிட்டு விடக்கூடாது."
"நான் எப்போதுமே சிம்பிளாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தான் முயற்சி செய்வேன். களத்தில் சிறந்த முடிவை எடுத்து பந்து வீச்சில் புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும். சில ஷாட்களை ஆடி வாய்ப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஐபிஎல் என்பது மிக நீண்ட தொடர். இதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், உங்களுக்கு மீண்டும் உத்வேகம் கிடைத்துவிடும் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்."