மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கிட்டத்தட்ட ஒரு நாக் அவுட் போட்டி போல் நடைபெறுகிறது. rcb, குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் நான்காம் இடத்திற்கு மும்பை மற்றும் டெல்லி அணிகள் போட்டி போடுகிறது.
இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா வெறும் ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து ரியான் ரிக்கல்டன் நிதானமாக விளையாடி 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்சர்கள் அடங்கும். இதேபோன்று வில் ஜாக்ஸ் 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஒரு கட்டத்தில் சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் நிதானமாக விளையாடி ரன்கனை சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 27 பந்துகளில் வெறும் 27 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் மூன்று ரன்களில் வெளியேற மும்பை அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்த சூழலில் கடைசி இரண்டு ஓவர்களில் சூரியகுமார் மற்றும் நமன் தீர் ஆகியோர் அபாரமாக விளையாடி மும்பை அணியை சரி விலிருந்து மீட்டனர்.
முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் நமன் தீர், சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினர்.மூன்று சிக்சர் இரண்டு பவுண்டரிகளை மும்பை அடிக்க 19வது ஓவரில் 27 ரன்கள் சென்றது. இதை அடுத்து, கடைசி ஓவரை இலங்கை வீரர் சமீரா வீசினார் அதிலும் சூரியகுமார் யாதவ் பட்டையை கிளப்பினார். இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை அவர் அடிக்க கடைசி 12 பந்துகளில் மும்பை அணி 48 ரன்களை குவித்தது.
இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய சூரியகுமார் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டர்களும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். நமன் தீர் 8 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்சர் என அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 300 என்ற அளவில் இருந்தது.