மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சூரிய குமார் யாதவ் இன்று சிஎஸ்கே அணி எதிராக தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 30 பந்துகளை எதிர்கொண்ட அவர் 68 ரன்கள் அடித்தார். இதில் 5 சிக்சர்களும், ஆறு பவுண்டரிகளும் அடங்கும்.
சூரிய குமார் ஸ்ட்ரைக் ரேட் 226 என்ற அளவில் இருந்தது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் யாதவ், நான் இந்த போட்டிக்கு முன்பு உங்களிடம் சொல்லி இருந்தேன். எங்கள் வீட்டில் இன்று கேக் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதை தற்போது சென்று சாப்பிட வேண்டும். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது. ரோகித் சர்மா இன்று அபாரமாக விளையாடினார். அவருடைய ஆட்டம் குறித்து அவருக்கு நன்றாகவே தெரியும். இந்திய கிரிக்கெட்டின் ஒரு ஜாம்பவானாக அவர் விளங்குகின்றார்.
ஆடுகளத்தில் பந்து கொஞ்சும் நின்று வந்தது. எனினும் ரோகித் சர்மா அதைப் பற்றி கவலைப்படாதே. உன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடு என்று எனக்கு அறிவுறுத்தினார். நாங்கள் இதே மும்பை ஆடுகளத்தில் தான் பிறந்து வளர்ந்து நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கின்றோம். எனவே இந்த ஆடுகளத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆட்டத்தில் நான் மூன்றாவது வீரராக களமிறங்குகிறேன் என்று பயிற்சியாளர் என்னிடம் கூறினார். ஜடேஜா பந்துவீச்சில் நாம் கொஞ்சம் அமைதி காத்து விளையாடினால், அவர் நமக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார். ஏனென்றால் அவருக்கு அதிக அனுபவம் இருக்கின்றது. ஜடேஜாவின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்காகவே நான் தனியாக பயிற்சி செய்தேன்.
சிஎஸ்கே அணியில் நிறைய சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதனால் மூன்றாவது வீரராக களம் இறங்குவது முக்கியமான விஷயமாக எனக்கு தெரிந்தது. இன்றைய ஆட்டத்தில் நான் சரியாக விளையாடாமல் போயிருந்தாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். வெற்றிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதை தவிர புள்ளி பட்டியலில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.