மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 45 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா ஐந்து பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் ரியான் ரிக்குல்டன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 58 ரன்கள் சேர்க்க, வில் ஜாக்ஸ் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் மும்பை அணி தடுமாறிய நிலையில் அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார்.

இதில் நான்கு சிக்சர்கள், நான்கு பவுண்டரிகள் அடங்கும். இதில் சூரியகுமார் ஸ்ட்ரைக் ரேட் 192 என்ற அளவில் இருந்தது. திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இறுதியில் நமன் தீர் 11 பந்துகளில் 25 ரன்களும், கார்பின் 10 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது.
லக்னோ அணியில் மாயங் யாதவ் மற்றும் ஆவேஷ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை அடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் லக்னோ அணி விளையாடியது. மிட்செல் மார்ஷ் 34 ரன்களில் ஆட்டமிழக்க, ஏய்டன் மார்க்கரம் ஒன்பது ரன்களும் எடுக்க, நிக்கோலஸ் பூரான் 27 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், நான்கு ரன்களில் வெளியேறினார்.
நடுவரிசையில் ஆயூஸ் பதோனி 35 ரன்களும், டேவிட் மில்லர் 24 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 161 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மும்பை பந்துவீச்சு தரப்பில் பும்ரா நான்கு விக்கெட்டுகளும், டிரெண்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மும்பை அணி ரன் ரேட் தற்போது 0.88 என்ற அளவில் இருக்கிறது. முதல் நான்கு இடங்கள் பிடித்திருக்கும் அணி அனைத்தும் 12 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதனால் அவர்கள் எஞ்சிய போட்டிகளில் வெறும் இரண்டு வெற்றியை பெற்றால் கூட சிஎஸ்கே வின் கதை முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.