மும்பை: 2025 ஐபிஎல் தொடர் கடந்த மே 8ஆம் தேதி நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் மே 17 முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகக் குழு அதிரடியாக ஒரு விதி மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியிலிருந்து விலகியுள்ள வெளிநாட்டு வீரர்களுக்குப் பதிலாக, தற்காலிகமாக மாற்று வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த தற்காலிக மாற்று வீரர்கள் தேர்வு 2025 ஐபிஎல் தொடர் முடியும் வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த மாற்று வீரர்களை எந்த அணியும் அடுத்த ஆண்டு தக்க வைத்துக்கொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது. அதன்படி, எந்த ஒரு வீரர் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாது என விலகினாரோ, அவரை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் தக்க வைக்க விரும்பினால் தக்க வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், இப்போது எஞ்சிய போட்டிகளுக்காக மட்டுமே மாற்று வீரராகத் தேர்வு செய்யப்படும் வீரர்களை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அவர்கள் இந்தச் சில போட்டிகளுக்காக மட்டுமே விளையாடுவார்கள். இதுதான் புதிய விதி மாற்றம்.
இந்த விதி மாற்றம் ஐபிஎல் அணிகளுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது. ஏனெனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளைச் சேர்ந்த சில வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே, அந்த அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.
2025 ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 17 முதல் தொடங்கும் எஞ்சிய லீக் போட்டிகள் முடிந்தவுடன், பிளேஆஃப் சுற்று நடைபெறும். ஜூன் 3 அன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய மூன்று அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. எனவே, அந்த அணிகள் வெளிநாட்டு வீரர்கள் சேவையை இழந்தாலும், அதனால் பெரிய இழப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் இதனால் அதிகமாகப் பாதிக்கப்படும். அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகி இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.