மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிமுறைகள் வெளியாகியுள்ள நிலையில், ஆர்டிஎம் கார்டு-க்கான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பலரும் பிசிசிஐ நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகளை பிசிசிஐ கடந்த வாரம் வெளியிட்டது. அதில் ஒவ்வொரு அணிக்கும் 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. 6 வீரர்களை தக்க வைக்காமல் குறைந்த வீரர்களை தக்க வைத்தால், அதற்கேற்ப ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது அணிகள் மற்றும் வீரர்கள் ஆகிய இரு தரப்புக்கும் சாதகமாக அமைந்தது.

ஆனால் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தும் அணிகளுக்கு புதிய சிக்கல் ஒன்றை பிசிசிஐ கொடுத்துள்ளது. அதாவது ஏற்கனவே தமது அணியில் ஆடிய வீரர்களை மீண்டும் வாங்க விரும்பும் அணிகள் ஆர்டிஎம் கார்டினை பயன்படுத்தலாம். ஆனால் மெகா ஏலத்தில் அந்த வீரருக்கான போட்டியிட்டு அதிக தொகை கொடுக்க முன் வரும் அணிக்கு, ஒரேயொரு வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும்.
அதாவது அஸ்வினை வாங்குவதற்காக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் போட்டிபோடுகிறது என்று வைத்து கொள்ளலாம். இரு அணிகளும் ஏலத்தில் தீவிரமாக பங்கேற்று இறுதியாக அஸ்வினை ரூ.7 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்க முன் வந்தால், ராஜஸ்தான் அணியால் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி அதே ரூ.7 கோடிக்கு வாங்க முடியும். இத்தனை நாட்களாக இதுதான் விதியாக இருந்து வந்தது.
ஆனால் இம்முறை ஆர்டிஎம் கார்டு வாய்ப்பை பயன்படுத்தினாலும் கூட, மீண்டும் ஏலத்தில் வென்ற சிஎஸ்கே அணிக்கு கடைசியாக ஒரேயொரு வாய்ப்பு அளிக்கப்படும். அப்போது சிஎஸ்கே அணி அஸ்வினை வாங்க ரூ.10 கோடி அளிக்க முன் வந்தால், மீண்டும் ராஜஸ்தான் அணியிடம் ஆர்டிஎம் பயன்படுத்த முன் வருகிறீர்களா என்று கேட்கப்படும்.
அப்போதும் ஆர்டிஎம் பயன்படுத்தி அஸ்வினை ராஜஸ்தான் வாங்க முன் வந்தால், அந்த அணிக்கே அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்படுவார். இதன் மூலமாக வீரருக்கும் அவருக்கான ஏலத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதிகளுக்கு எதிராக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏலத்தில் கூடுதலாக ஒரு வாய்ப்பு அளிப்பது, ஆர்டிஎம் மதிப்பையே குறைப்பதாக கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகத்திற்கு சில அணிகள் கடிதம் எழுதியுள்ளதாகவும், சில அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐ நிர்வாகிகளை தொடர்புகொண்டு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆர்டிஎம் ரூல்ஸை மாற்றும் எண்ணத்தில் பிசிசிஐ இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. இதனால் மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.