அகமதாபாத்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரனிடம் தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டு வாங்கி கட்டிக் கொண்டார் முகமது சிராஜ். 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அதிரடியாக ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் 64 பந்துகளில் 117 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் நிக்கோலஸ் பூரன் மூன்றாம் வரிசையில் இறங்கி தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை ஆடினார்.

அப்போது 16வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அதற்கு முன்பு வரை மூன்று ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார் முகமது சிராஜ். இந்த நிலையில், 16வது ஓவரின் போது முதல் மூன்று பந்துகளில் மிட்செல் மார்ஷ் ஒரு பவுண்டரியும், நிக்கோலஸ் பூரன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். இதை அடுத்து பொறுமை இழந்த முகமது சிராஜ் நான்காவது பந்து வீசிய பின் நிக்கோலஸ் பூரன் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார்.
ஆனால், நிக்கோலஸ் பூரன் அதையெல்லாம் காதிலேயே வாங்காமல் பபுள் கம்மை மென்று கொண்டிருந்தார். ஆனாலும் முகமது சிராஜ் தொடர்ந்து அவரை சீண்டிக் கொண்டே இருந்தார். இதைப் பார்த்த அம்பயர் முகமது சிராஜை எச்சரித்து அனுப்பினார்.
நான்காவது பந்தில் நிக்கோலஸ் பூரன் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதன் பிறகு ஐந்தாவது பந்தில் நிக்கோலஸ் பூரன் சிக்ஸ் அடித்தார். அப்போது முகமது சிராஜ் தனது அணி வீரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு, அந்த ஓவரின் கடைசி பந்தில் நிக்கோலஸ் பூரன் லெக் ஸ்டெம்ப் அருகே அருமையாக வீசப்பட்ட பந்தை சமாளித்து ஆடி ஒரு பவுண்டரி அடித்தார்.
அந்த ஷாட்டை ஆடியவுடன் நிக்கோலஸ் பூரன் தனது பேட்டுக்கு முத்தம் கொடுத்ததுடன், முகமது சிராஜை நோக்கி ஒரு முத்தத்தை பறக்க விட்டார். இதன் மூலம் வாயால் சண்டை போட்ட முகமது சிராஜுக்கு தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்தார். இந்த சம்பவம் இந்தப் போட்டியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. சிராஜ் செய்தது தேவையே இல்லாத வேலையாக இருந்தது. மேலும், பூரனை மேலும் தூண்டி விட்டது.
பின்னர், நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது சிராஜ் 3 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்த நிலையில், நான்காவது ஓவரில் மட்டும் 20 ரன்களை வாரி இறைத்திருந்தார். அதன் மூலம் நான்கு ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்; விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
பின்னர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியாக முயற்சி செய்தது. ஆனால், விக்கெட் வீழ்ச்சியின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.