சென்னை: கேகேஆர் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரமன்தீப் சிங் ரூ.4 கோடிக்கு கேகேஆர் ரீடெய்ன் செய்த விவகாரம் தொடர்பாக மனம் திறந்துள்ளார். தனது வாழ்க்கையில் பணத்தை விடவும் விஸ்வாசம் முக்கியம் என்று கூறியுள்ள ரமன்தீப் சிங், கேகேஆர் அணியை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள கேகேஆர் அணி, எதிர்பார்த்தை போல் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள கேகேஆர் அணி, 3 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இதனால் இம்முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கேகேஆர் அணிக்கு வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கு அந்த அணியால் தக்க வைக்கப்பட்ட வீரர்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். சுனில் நரைன், ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோர் ரீடெய்ன் செய்யப்பட்டனர். அதில் ரமன்தீப் சிங் வெறும் ரூ.4 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
ஏனென்றால் அவர் அபாரமாக விளையாடி ரீடெய்ன் செய்யப்பட்ட சில நாட்களிலேயே இந்திய அணிக்காகவே அறிமுகம் செய்யப்பட்டார். குறைந்த விலைக்கு ரீடெய்ன் செய்யப்பட்டது தொடர்பாக ரமன்தீப் சிங் பேசுகையில், ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கிய போது ஏராளமான அணிகள் என்னை தொடர்பு கொண்டனர். அவர்கள் தரப்பில், ரீடென்ஷனுக்கு ஒப்புக் கொள்ள வேண்டாம்.
உங்களை மெகா ஏலத்தில் வாங்குவதற்கு ரூ.10 கோடி வரை செலவு செய்ய தயாராக உள்ளோம் என்றனர். ஆனால் எனக்கு பணத்தை விடவும் விஸ்வாசம் மிகவும் முக்கியமாக கருதினேன். ஏனென்றால் எனக்கு தேவையான நேரத்தில் கேகேஆர் அணி மிகப்பெரிய இடத்தை கொடுத்தது. அதனால் கேகேஆர் அணியில் இருந்து வெளியேற கூடாது என்று முடிவு செய்தேன்.
ரீடென்ஷன் நெருங்கிய போது, கேகேஆர் அணியின் சிஇஓ சிங்கி சார் என்னை அழைத்தார். அவர், நீ எங்களின் ரீடென்ஷன் திட்டத்தை இருக்கிறாய்.. உங்களின் திட்டம் என்ன? ஒருவேளை மெகா ஏலத்தில் பங்கேற்க நினைத்தால், நிச்சயம் ஆர்டிஎம் மூலம் வாங்க முயற்சிப்போம். உங்களின் முடிவு என்ன என்று கேட்டார். ஆனால் நான் எந்த நிபந்தனையும் விதிக்காமல் ரீடெய்ன் செய்யப்படுவது மகிழ்ச்சி என்று பதில் அளித்தேன்.
ஏனென்றால் மெகா ஏலத்தில் பங்கேற்றால், எந்த அணி வேண்டுமானாலும் நம்மை வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனக்கு கேகேஆர் அணியிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. இதனால் சில கோடிகளை இழப்பது பெரிய விஷயமே கிடையாது. கேகேஆர் அணி நிர்வாகிகளின் வார்த்தைகள் மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.