மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சமீபத்தில் 6 வெற்றிகளைத் தொடர்ந்து பெற்றிருக்கிறது. அதனால் அந்த அணியே இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் என ரசிகர்களும் முன்னாள் வீரர்கள் பலரும் பேசத் துவங்கியிருக்கின்றனர். ஆனால், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், மும்பை இந்தியன்ஸ் அணியால் இந்த வெற்றிகளை தக்கவைக்க முடியாது எனவும், மற்றொரு அணியே ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான அதிக வாய்ப்பு உள்ளது எனவும் கூறியிருக்கிறார். அவர் குறிப்பிடும் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
ஐபிஎல் தொடரில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு கோப்பை கூட வென்றதில்லை. அந்த அணி 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்திருந்தது. இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் அந்த அணி இதுவரை அதிக வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது அதில் 7 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அந்த அணியும் முதல் போட்டி முதல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே சரிசமமாகச் செயல்பட்டு வருகிறது. இது பற்றிப் பேசிய சுனில் கவாஸ்கர், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த அணி நன்றாக பேட்டிங் செய்துள்ளது. ஃபீல்டிங்கும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது."
"மும்பை இந்தியன்ஸ் அணி அந்த அணிக்கு அருகே வந்திருக்கிறது. சமீபத்தில் அதிக வெற்றிகளைப் பெற்று எழுச்சியடைந்திருக்கிறார்கள். ஆனால் கேள்வி என்னவெனில், அதை அவர்களால் தொடர்ந்து செய்ய முடியுமா என்பது தான். அடுத்து அவர்களுக்கு மூன்று கடினமான போட்டிகள் உள்ளன, சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளனர். அந்தப் போட்டிகளில் அவர்கள் எப்படி முன்னெடுத்துச் செல்வார்கள் என்பது தான் முக்கியம். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் ஐபிஎல் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி" என்றார் சுனில் கவாஸ்கர்.