மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒவ்வொரு அணிகளும் ரீடெய்ன் செய்த வீரர்களின் பட்டியலை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே இடைவெளி இருப்பதால், பிசிசிஐ அவசரம் காட்டுவது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான புதிய விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யும் வீரர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்களையும், ஒரு உள்ளூர் வீரரையும் தக்க வைக்க வேண்டும் என்று விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு வீரர்களுக்கும் பல்வேறு கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மெகா ஏலத்தில் பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்களுக்கு, அடுத்த 2 மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது. அதேபோல் மெகா ஏலத்தில் ஒரு வீரரை குறிப்பிட்ட அணி ஏலத்தில் வாங்கிய பின், கடைசி நேரத்தில் வர முடியாது என்று அறிவித்தால், அவர் அடுத்த 2 ஐபிஎல் தொடர்களில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரீடெய்ன் செய்யும் வீரர்களுக்கான தொகையையும் பிசிசிஐ உயர்த்தியுள்ளது.
முதல் வீரராக ரீடெய்ன் செய்யப்படுவருக்கு ரூ.18 கோடியும், 2வது வீரராக ரீடெய்ன் செய்யப்படுபவருக்கு ரூ.14 கோடியும், 3வது வீரராக ரீடெய்ன் செய்யப்படுபவருக்கு ரூ.11 கோடியும், 4வது வீரராக ரீடெய்ன் செய்யப்படும் வீரருக்கு ரூ.18 கோடியும், 5வது வீரராக செய்யப்படுபவருக்கு ரூ.14 கோடியும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அன்-கேப்ட் வீரருக்கு ரூ.4 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் 10 அணிகளில் எந்த அணியும் 4 வீரர்களுக்கு மேல் ரீடெய்ன் செய்ய வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடைசி 2 வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கு பதிலாக, அவர்களை ஆர்டிஎம் மூலமாக மெகா ஏலத்தில் வாங்கலாம் என்று முடிவு எடுக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் பல்வேறு அணிகளும் குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆர்டிஎம் கார்டுகளுடன் ஏலத்தில் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியிலும் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை அக்.31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ கெடு விதித்துள்ளது. இதற்கு இன்னும் ஒரு மாதம் காலம் மட்டுமே உள்ளது. இதனால் எதற்காக பிசிசிஐ ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை இவ்வளவு அவசரமாக கேட்கிறது என்ற ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
இதனால் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் 3வது வாரத்தில் நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நவம்பர் மாதத்தில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்டது. ஏனென்றால் டிசம்பர் முதல் வாரத்தில் ஐசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஏற்கவுள்ளார். அதற்குள் ஐபிஎல் ஏலத்தை முடிக்க வேண்டும் என்பதே பிசிசிஐ திட்டமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.