அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் முடிவில் யார் அதிக ரன் குவித்த வீரராக இருந்து ஆரஞ்சு தொப்பியை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார். அவர் 15 இன்னிங்ஸ்களில் 759 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரை முந்துவதற்கு இரண்டு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது. ஆனால், அதுவும் மிகவும் கடினமான விஷயம் தான்.
தற்போது அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 717 ரன்கள் எடுத்திருக்கிறார். சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் 650 ரன்கள் எடுத்திருக்கிறார். மிட்செல் மார்ஷ் நான்காவது இடத்தில் இருக்கிறார். அவர் 627 ரன்கள் எடுத்திருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ், சுப்மன் கில் இடம் பெற்றிருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் இடம் பெற்றிருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகளும் வெளியேறிவிட்டன. இனி அவர்கள் எந்த போட்டியிலும் விளையாட முடியாது என்பதால் அவர்களால் இனி அதிக ரன்கள் சேர்க்க முடியாது.
இந்த நிலையில், ஐந்தாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோத உள்ளனர். இதில் விராட் கோலி 614 ரன்கள் எடுத்திருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் 603 ரன்கள் எடுத்திருக்கிறார். இவர்கள் இருவரும் சாய் சுதர்சனை முந்த வேண்டுமென்றால் எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
விராட் கோலி 146 ரன்கள் எடுத்தால் சாய் சுதர்சனை முந்தி ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்ற முடியும். ஸ்ரேயாஸ் ஐயர் 157 ரன்கள் எடுத்தால் சாய் சுதர்சனை முந்தி 760 ரன்கள் சேர்த்து முதலிடத்தைப் பிடிக்கலாம். ஐபிஎல் இறுதிப் போட்டியில் இப்படி ஒரு அதிரடி சதத்தை இருவரும் அடிப்பார்களா என்பது இப்போதைய கேள்வியாக உள்ளது.
அப்படி நடந்தால் மட்டுமே சாய் சுதர்சனை விராட் கோலி அல்லது ஸ்ரேயாஸ் ஐயரால் முந்த முடியும். இல்லை எனில், சாய் சுதர்சன் இந்த ஆண்டு அதிக ரன் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதன்முறையாக தமிழக வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வரலாற்று நிகழ்வும் அரங்கேறும்.