பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ரன் குவித்து வருகிறார் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன். தமிழக வீரரான அவருடன் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்ற போட்டி போட்டு வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேட்டிங் திறனை தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் துவக்க வீரராக இடம்பெற்றிருக்கும் சாய் சுதர்சன், 10 போட்டிகளில் 504 ரன்கள் எடுத்திருக்கிறார். 5 அரை சதங்களை அடித்திருக்கிறார். 2 போட்டிகளில் 48 மற்றும் 49 ரன்கள் எடுத்து, இரண்டு அரை சதங்களை தவறவிட்டார். மேலும் சில போட்டிகளில் 30 ரன்களுக்கு மேலும் எடுத்தார். இவ்வாறாக சாய் சுதர்சன் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்து வருகிறார். மேலும் 504 ரன்கள் எடுத்த பிறகு அவரது ஸ்ட்ரைக் ரேட் 154.12 என்பதாக உள்ளது. ஒரு துவக்க வீரராக நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் சாய் சுதர்சன் ரன் குவித்து இருக்கிறார்.

இதில் அனைவரும் பாராட்டுவது அவரது பேட்டிங் செய்யும் விதத்தைத்தான். ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் எவ்வாறு பந்துகளைச் சரியாகத் தேர்வு செய்து சரியான இடத்தில் ஷாட் அடிப்பாரோ, அதுபோல மிகவும் கவனமாகவே சாய் சுதர்சன் ஆடி வருகிறார். அதாவது சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்றோர் எப்படி தவறான பந்துகளை மட்டும் தேர்வு செய்து அடிப்பார்களோ, அதே போன்ற ஒரு பேட்டிங் வியூகத்தைத்தான் சாய் சுதர்சனும் பின்பற்றி வருகிறார்.
மேலும் அவர் நவீன டி20 யுகத்தின் அதிரடி பேட்டிங் முறையை பின்பற்றவில்லை. அனைத்து பந்துகளையும் அடிக்க வேண்டும் என்ற வெறியுடன் அவர் ஆடவில்லை. தவறான ஷாட்களை அதிகம் அடிப்பதில்லை. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, சாய் சுதர்சன் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவதற்குத் தகுந்தவர் என ரவி சாஸ்திரி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பாராட்டியிருக்கின்றனர்.
மறுபுறம், விராட் கோலி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வந்தாலும், சாய் சுதர்சனை விட ஒரு சில ரன்கள் மட்டுமே அதிகமாக எடுத்து இருக்கிறார். சாய் சுதர்சன் 10 போட்டிகளில் 504 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், விராட் கோலி 11 போட்டிகளில் 505 ரன்கள் எடுத்திருக்கிறார். சாய் சுதர்சனை விட ஒரு இன்னிங்ஸ் அதிகமாக விராட் கோலி ஆடி இருக்கிறார்.
மேலும் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் பார்த்தால், விராட் கோலி 143.4 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருக்கிறார். சாய் சுதர்சனை விட அவரது ஸ்ட்ரைக் ரேட் சற்று குறைவாகவே உள்ளது. விராட் கோலி 3 போட்டிகளில் நாட் அவுட் ஆக இருந்துள்ளார். ஆனால் சாய் சுதர்சன் அனைத்து போட்டிகளிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் சாய் சுதர்சன், விராட் கோலியை விடப் பின்தங்கியிருக்கிறார்.
லீக் சுற்றின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகின்றன. எனவே விராட் கோலியும், சாய் சுதர்சனும் பிளே ஆஃப் சுற்றிலும் 'அதிக ரன் எடுக்கப் போவது யார்?' என்ற போட்டியில் ஒருவரை ஒருவர் விஞ்சுவார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.