மும்பை: ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இருந்த கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் அணியுடன் இணைந்த நிலையில், அவரது இடத்திற்கு இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ள நிலையில், 10 அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஒரு பக்கம் ரீடென்ஷன், மறுபக்கம் பயிற்சியாளர்கள் குழுவில் மாற்றம் என்று பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஏராளமான அணிகளில் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் இணைந்தார். அதேபோல் கேகேஆர் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோவும், மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயவர்தனே, பவுலிங் பயிற்சியாளராக பராஸ் ஆம்ரே ஆகியோர் கொண்டு வரப்பட்டனர். அதேபோல் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோடு கொண்டு வரப்பட்டனர்.
தொடர்ந்து பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார். இன்னொரு பக்கம் டெல்லி அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி மற்றும் இயக்குநராக வேணுகோபால் ராவ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இப்படி ஒவ்வொரு அணியிலும் பயிற்சியாளர்கள் குழுவில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து வருகிறது.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டு அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இருந்த கேரி கிர்ஸ்டன், தற்போது பாகிஸ்தான் அணியின் ஒயிட் பால் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இதனால் அவரது இடத்திற்கு இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கொண்டு வரப்படவுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பார்த்திவ் படேல், கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இடம்பெற்றிருந்தார். மும்பை அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார்.
தற்போது குஜராத் அணியில் பார்த்திவ் படேல் இணையவுள்ளதால், மும்பை அணியுடனான 4 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வரவுள்ளது. சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட ஏராளமான அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட பார்த்திவ் படேல், குஜராத் அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண்பதில் முக்கிய நபராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.