அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஒட்டு மொத்த சிஎஸ்கே ரசிகர்களும் சாம்பியன் பட்டத்தை பஞ்சாப் அணிதான் வெல்ல வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். பலரும் பஞ்சாப் அணிக்கு ஆதரவு அளித்து இருந்தார்கள். ஆனால் ஆர்சிபி அணி இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்டு வெறும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தமிழக ரசிகர்கள் மக்கள் கேப்டன் என்று தான் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பை அருகே வரை வந்து தோல்வியை தழுவி இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரேயாஸ், மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இருக்கிறோம். அனைத்து பாராட்டுக்களும் எங்கள் அணி நிர்வாகத்திற்கு தான் சேரும். ஒவ்வொரு வீரர்களும் அபாரமாக விளையாடினார்கள். கடைசி போட்டியில் நாங்கள் அகமதாபாத்தில் தான் விளையாடினோம்.
இதனால் 200 ரன்கள் என்பது நிச்சயமாக அடிக்கக்கூடிய இலக்கு தான் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஆசிபி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். குறிப்பாக குர்னல் பாண்டியா தன்னுடைய ஒட்டுமொத்த அனுபவத்தையும் அபாரமாக பயன்படுத்தினார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
இன்னும் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களையும் இணைத்து நான் பெருமைப்படுகின்றேன். எங்கள் அணியில் பல இளைஞர்களுக்கு இதுதான் முதல் சீசன். முதல் சீசனில் கொஞ்சம் கூட பயமின்றி எங்கள் அணி வீரர்கள் விளையாடுகிறார்கள். எங்களுடைய பணி இன்னும் முடியவில்லை. அடுத்த ஆண்டு மீண்டும் வந்து கோப்பையை வெல்வோம்.
ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் நாங்கள் தயாரான விதம், இந்த சீசனில் ஒரு பாசிட்டிவான விஷயமாக நான் கருதுகின்றேன். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் நிச்சயம் நல்ல அனுபவத்தை பெற்று இருப்பார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு நாங்கள் அடுத்த ஆண்டு அணியை கட்டமைப்போம் என்று ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.