அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபயர் ஆட்டத்தில் பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். இதில் ஐந்து பவுண்டர்களும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.
இதன் மூலம் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் அணியும் பல பரிட்சை நடத்துகிறது.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், "இது போன்ற பெரிய போட்டிகளை நான் விரும்புகிறேன். நான் எப்போதுமே எனக்குள்ளும் என்னை சுற்றி இருக்கும் நண்பர்களிடமும் இதை தான் சொல்வேன். மிகப்பெரிய போட்டிகளில் நல்ல ரிசல்ட் வேண்டும் என்றால், நீங்கள் பதற்றம் அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும்."
"அமைதியாக இருக்க நான் என்னுடைய மூச்சில் கவனம் செலுத்தினேன். நன்றாக மூச்சு இழுத்து விடும் போது பதற்றம் குறையும். முதல் பந்திலே அதிரடியாக ஆடுவது முக்கியம். அதை செய்ய முடியவில்லை என்றால், நாம் பெறும் தொடக்கத்தை பெரிய ஸ்கோர் ஆக மாற்ற வேண்டும். நான் முதலில் தடுமாறினாலும், களத்தில் நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைத்தேன்."
"ஏனென்றால் என் எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் சேர்த்தார்கள். எனவே நான் களத்துல் அதிக நேரம் இருந்தால் நிச்சயம் நம்மால் அதிரடி காட்ட முடியும் என்று நினைத்தேன். ஆர் சி பி அணிக்கு எதிரான தோல்வியை நாங்கள் மறந்து விட்டோம். அதைப் பற்றி பெரிய அளவில் நாங்கள் யோசிக்கவில்லை."
"என்ன தவறு செய்தோம் என்பதை பார்த்து, அதனை நாங்கள் திருத்திக் கொண்டோம். இளம் வீரர்கள் அச்சமின்றி அதிரடியாக விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் அவர்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சொல்வேன். அவர்களிடம் இருந்து பெரியதாக நான் எதுவும் எதிர்பார்க்க மாட்டேன். அவர்களிடம் பெரிய அளவு அனுபவம் இல்லை என்றாலும், இயற்கையாகவே பயமின்றி இதுபோல் பெரிய ஆட்டங்களில் விளையாடுவதற்கான திறமை அவர்களிடம் இருக்கின்றது."
"அதே சமயம் அனுபவங்களையும் பெறுவது முக்கியம். எங்கள் அணி நிர்வாகம், எங்களை சிறப்பாக கையாளுகிறது. எங்கள் அணியின் சூழலும் பாசிட்டிவாக இருக்கின்றது. நாங்கள் நிகழ்காலத்தில் எப்போதுமே இருக்கின்றோம். ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று வெற்றியை கொண்டாடுவோம். ஆனால் எங்களுடைய பணி பாதி தான் முடிந்து இருக்கின்றது.நான் இறுதிப் போட்டி குறித்து பெரியதாக எல்லாம் யோசிக்கவில்லை. நன்றாக ஓய்வெடுத்து மசாஜ் எடுத்துக்கொண்டு மனதளவில் சரியான நிலையில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்" என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.