தர்மசாலா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்து இருக்கிறது. புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும் ஏழாவது இடத்தில் இருந்த லக்னோ அணியும் பல பரிட்சை நடத்துகிறது.
லக்னோ அணியை பொறுத்தவரை எஞ்சி இருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழலில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரியான்ஸ் ஆர்யா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். முதல் ஓவரிலே விக்கெட் பறிபோனது என்ற கொஞ்சம் கூட பயமில்லாமல் பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடி காட்டினர். குறிப்பாக பிராப்சிம்ரன்சிங் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் ஜோடி லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.
இதில் ஜோஸ் இங்கிலீஷ் 4 சிக்சர் ஒரு பவுண்டரி என 14 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் பிராப் சிம்ரன்சிங் அதிரடி காட்ட 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதேபோன்று களத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இதேபோன்று நெஹல் வதேரா ஒன்பது பந்துகளில் 16 ரன்களும், ஷாசாங் சிங் 15 பந்துகளில் 33 ரன்களும், மார்க்கஸ் ஸ்டோனிஸ் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தனர். பிராப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 பந்துகளில் அவர் 91 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகளும் ஏழு சிக்ஸர்களும் அடங்கும்.
இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236-ரன்கள் எடுத்திருக்கிறது. கடைசி ஐந்து ஓவரில் மட்டும் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 75 ரன்கள் குவித்து இருக்கிறது. குறிப்பாக 18 வது ஓவரில் பஞ்சாப் அணி வீரர்கள் மூன்று பவுண்டரி இரண்டு சிக்ஸர் என 26 ரன்கள் குவித்திருக்கிறார்கள். இது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருக்கிறது.